இலங்கை

முதல்வர் விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடாத்த இலங்கை தமிழ், முஸ்லிம் கட்சிகள் முடிவு!

இலங்கையிலுள்ள பிரதான தமிழ், முஸ்லிம் கட்சிகள், தமிழ் பேசும் கட்சிகளின் பேரவையாக இணைந்து செயற்படத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும், அதன் அடிப்படையில் இந்திய வெளியுறவுச் செயலாளரை விரைவில் சந்திக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என்றும், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்களையும் சந்திக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நேற்று திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்துக்கு வருகை தந்த அவர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் திங்கட்கிழமை அன்று, தமிழ் பேசும் கட்சிகள் கூட்டாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்துத் தமது சமூகங்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடவுள்ளன. அதேநாளில் எதிர்க்கட்சித் தலைவரையும் சந்திக்க முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.

இலங்கைக்கு விரைவில் வருகை தரவுள்ள இந்திய வெளியுறவுச் செயலாளரைச் சந்தித்து, 13 ஆவது திருத்தச் சட்டம், மாகாண சபைத் தேர்தல் மற்றும் தமிழ் மக்களின் காணிப் பிரச்சினைகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்துப் பேசத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களையும் சந்தித்துப் பேச்சு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

யுத்தக் காலத்தில் கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகளை உடனடியாக விடுவிப்பது தொடர்பான கோரிக்கையை ஜனாதிபதியுடனான சந்திப்பில் முன்வைக்கவுள்ளோம் எனவும் கூறியுள்ளார்.

தமிழக மீனவர் பிரச்சினை இரு நாடுகளின் மீனவ சமூகங்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய மனிதாபிமான விடயம் என்பதால், இராஜதந்திரப் பேச்சுகள் மூலம் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்.

இந்தியாவின் அபிவிருத்தி உதவிகள் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழ் பேசும் மக்களுக்கும் உரிய முறையில் விரிவுபடுத்தப்பட வேண்டும்.” – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button