இலங்கை

ராஜபக்ஷர்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுப்படுத்த அரசாங்கம் முயற்சி

ராஜபக்ஷர்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. அரசியலமைப்புத் திருத்தம் ஊடாக நீதியரசர்களின் பதவி காலத்தை நீட்டிக்கும் தார்மீக உரிமை உரிமை அரசாங்கத்துக்கு கிடையாது. சர்வஜன வாக்கெடுப்பு ஊடாக மக்களே தீர்மானிக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும்,பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில்  நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் இதுவரையில் முன்னெடுக்கவில்லை.மாறாக அரசியல் பழிவாங்கலை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறது.

நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.ஆனால் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. விவசாயிகளின் போராட்டத்துக்கு இன்றுவரை நியாயமான தீர்வு கிடைக்கவில்லை.

ராஜபக்ஷர்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது.ராஜபக்ஷர்களை சிறைக்கு அனுப்புவதற்காகவே நீதியரசர்களின் பதவி காலம் நீட்டிக்கப்படுவதாக ஆளும் தரப்பின் உறுப்பினர் பகிரங்கமாகவே குறிப்பிட்டுள்ளார்.

நீதித்துறையின் சுயாதீனத்தை பாதுகாப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் நீதித்துறையில் ஆதிக்கம் கொள்ள முயற்சிக்கிறது. அரசியலமைப்புத் திருத்தம் ஊடாக நீதியரசர்களின் பதவிக் காலத்தை நீட்டிக்க முயற்சிக்கப்படுகிறது.

அரசியலமைப்புத் திருத்தம் ஊடாக நீதியரசர்களின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் தார்மீக உரிமை அரசாங்கத்துக்கு கிடையாது.நீதியரசர்களின் பதவி காலத்தை அதிகரிக்க வேண்டுமாயின் அது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button