செம்மணிப் புதைகுழி அகழ்வைப் பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றியம்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் எட்டுப் பேரைக் கொண்ட உயர்மட்ட தூதுக்குழுவினர் , நேற்றைய தினம் செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட்டனர்.
செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டது.
அதனை அடுத்து நேற்றைய தினம் புதன்கிழமை புதைகுழியில் முன்னெடுக்கப்படும் அகழ்வு பணிகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ, ஜேர்மனி தூதுவர் கலாநிதி பெலிக்ஸ் நியுமன், பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட், இத்தாலித் தூதுவர் டாமியானோ பிராங்கோவிக், நெதர்லாந்து தூதுவர் விபே டி போயர், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளான பிரதித் தூதுக்குழுத் தலைவர் கலியா அகிஷேவா, ஒத்துழைப்புப் பிரிவுத் தலைவர் கலாநிதி ஜோஹன் ஹெஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர் பார்வையிட்டனர்.
இதன்போது யாழ்ப்பாணம் நீதிவான் எஸ்.லெனின்குமார், தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா, சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் உள்ளிட்டோர் அகழ்வு நடவடிக்கை தொடர்பாக தெளிவுபடுத்தினர்.
ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட தூதுக்குழுவின் வருகையையொட்டி செம்மணி மனித புதைகுழி பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
![]()