ஈரானுடனான பேச்சுவார்த்தைக்கு தயாராகவே உள்ளோம் – அமெரிக்கா தெரிவிப்பு!

ஈரான் நெருக்கடிக்குத் தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா இன்னும் தயாராகவே உள்ளது என்றும், ஆனால் தெஹ்ரான் தரப்பு பேச்சுவார்த்தைகளில் தீவிரத்தன்மை காட்டவில்லை என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.
இதற்கிடையில், விரிவடைந்து வரும் மோதலானது உலகின் மிக முக்கியமான இரண்டு எரிசக்திப் போக்குவரத்துப் பாதைகளை பாதித்துள்ளது.
யேமனின் ஈரான் ஆதரவு ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, சவுதி மசகு எண்ணெயை ஆசியாவிற்கு ஏற்றிச் சென்ற மூன்று எண்ணெய் கப்பல்கள் செங்கடலில் தங்கள் பயணப் பாதையை மாற்றிக்கொண்ட மறுநாளே, தென்கிழக்கு ஆசிய வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் ரூபியோ இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.
பெப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுடன் தொடங்கிய போரில், வளைகுடாப் பகுதி முழுவதும் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கியுள்ள நிலையில், செங்கடலின் நுழைவாயில் பகுதியில் உள்ள கடற்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது திங்களன்று கடற்படை முற்றுகையை அறிவித்தனர்;
இதன் மூலம் இப்போரில் ஒரு புதிய முனையைத் திறக்கும் சூழல் உருவாகியுள்ளது.
வளைகுடாவிலிருந்து வெளியேறும் ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் ஏற்கனவே அச்சுறுத்தல் விடுத்து வருவதால், தினமும் மில்லியன் கணக்கான பீப்பாய் சவுதி எண்ணெய் வெளியேறுவதற்கு செங்கடல் முக்கிய மாற்றுப் பாதையாக இருந்து வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.
![]()