உலகம்

உக்ரைன் தலைநகரில் குடியிருப்புகள் மீது ரஷியா தாக்குதல்!

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். 46 பேர் படுகாயமடைந்தனர்.

உக்ரைன், நேட்டோ நாடுகளில் இணைவதை எதிர்த்து 2022 இல் தொடங்கிய போர், 5 ஆண்டுகளை கடந்து முடிவின்றி நீடித்து வருகிறது.

ரஷியாவுக்கு சீனா, வட கொரியா மறைமுக ஆதரவு வழங்கி வரும் நிலையில் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் பொருளுதவியும் ஆயுத உதவியும் வழங்கி வருகின்றன.

உக்ரைனின் சில எல்லைப் பகுதிகளை ரஷியா கைப்பற்றியுள்ளது. ரஷியாவுக்குள் உக்ரைன் நடத்தி வரும் டிரோன் தாக்குதல்களில் அந்நாட்டின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிக்கப்பட்டு கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இது ரஷியாவை மேலும் ஆத்திரமூட்டியுள்ள நிலையில் நேற்று (05) இரவு தொடங்கி இன்று (06) அதிகாலை வரை உக்ரைனின் கீவில் 20 இற்கும் மேற்பட்ட இடங்களில் ரஷியா வான்வழித் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

இதில் 46 இற்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமுற்ற நிலையில் தாக்குதலில் உயிரிழந்த 11 பேரில் 5 பேர் குழந்தைகள் என தெரியவந்துள்ளது.

தகவலின்படி, கீவில் உள்ள இரண்டு மாவட்டங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் தாக்கப்பட்டுள்ளன. உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகள் பல ஏவுகணைகளை இடைமறித்தன. இருப்பினும் சில ஏவுகணைகள் கட்டிடங்களை நேரடியாக தாக்கியுள்ளது.

இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இரவு முழுவதும் நடைபெற்ற இந்த டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் மெட்ரோ நிலையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

ரஷியா வேண்டுமென்றே குடியிருப்பு கட்டிடங்களை குறிவைத்து நடத்திய இந்த தாக்குதலில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுருக்கலாம் என உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

இதனிடையே தங்களின் எல்லைக்குள் இருக்கும் மின்சக்தி நிலையங்களை உக்ரைன் தாக்கியதாக ரஷியா தெரிவித்துள்ளது.

துருக்கியில் நடக்க இருக்கும் நேட்டோ கூட்டமைப்பின் கூட்டத்தில் வைத்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்-ஐ, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திக்க இருக்கும் தருவாயில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

ரஷிய ஏவுகணைகளை தடுத்தழிக்க தங்களுக்கு மேலதிக வான் பாதுகாப்பு ஏவுகணைகள் வேண்டும் என நேட்டோ கூட்டத்திற்கு புறப்பட்ட ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் பல உயிர்கள் பலியாகும் எனவும், இந்த தாமதம் ரஷியாவை போரை தொடர ஊக்குவிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணைகளை தயாரிப்பதற்காக லைசன்ஸ்-ஐயும் ஜெலன்ஸ்கி கோரியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button