செம்மணிப் புதைகுழிக்கு நீதி கோரி; 400 க்கும் மேல் தீப்பந்தங்களை ஏந்தி கவனயீர்ப்புப் போராட்டம்

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி நடத்தப்பட்ட அணையா விளக்குப் போராட்டத்தின் ஆறு அம்ச கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தி 427 தீப்பந்தங்கள் ஏந்தி கவனயீர்ப்பு போராட்டம் யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் உரிமைப்பந்தம் என்ற அமைதிவழி மக்கள் எழுச்சி கவனயீர்ப்பு செம்மணி பகுதியில் உள்ள அணையா விளக்கு திடல் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
அதன் போது, அணையாவிளக்கு தூபிக்கு மலர் மாலை அணிவித்து, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு பிரகடனம் வாசிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, செம்மணி மனித புதைகுழியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு அகழ்வு பணிகளில் இதுவரையில் 412 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , 1999ஆம் ஆண்டு கால பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, மீட்கப்பட்ட 15 என்பு கூடுகளுமாக 427 என்பு கூடுகளை நினைவுறுத்தி , 427 தீப்பந்தங்கள் கொளுத்தப்பட்டன.
இதன்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூக தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
![]()