50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது

சுமார் 15,000 பேரை கொலை செய்ய திட்டமிட்ட பயாஸ் பிரேம்ஜி(Fayaaz Premji) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
15,000 பேரை கொல்ல சதி
மும்பை மொஹரம் ஊர்வலத்தின் போது விஷம் கலந்த காப்ஸ்யூல் மாத்திரைகளை விநியோகித்து ஆயிரக்கணக்கானோரை கொல்ல பயாஸ் பிரேம்ஜி என்பவர் திட்டமிட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையின் டோங்க்ரி பகுதியில் தங்கியிருந்த பயாஸ் பிரேம்ஜி இந்த சதித் திட்டத்திற்காக 50 கிலோ எடையுள்ள எலி மருந்து(Zinc Phosphide) மற்றும் 30,000 காலி காப்ஸ்யூல் மாத்திரைகளை வாங்கியுள்ளார்.

ஒவ்வொரு காப்ஸ்யூல்களிலும் ஒரு கிராம் அளவிற்கு நிரப்பிய பயாஸ் பிரேம்ஜி, அதனை தன்னார்வலர்கள் உதவியுடன் மத ஊர்வலத்தில் வலி நிவாரணி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து என பொதுமக்களுக்கு விநியோகம் செய்துள்ளார்.
இதை சாப்பிட்ட சல்மான் சையத் மற்றும் அலி அப்பாஸ் உட்பட 11 பேர் கடுமையான வாந்தி போன்ற உடல் உபாதைகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் அதிர்ஷ்டவசமாக அனைவரும் தற்போது சீரான உடல் நலத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பயாஸ் பிரேம்ஜி
இந்நிலையில் ஜூன் 27ம் திகதி பயாஸ் பிரேம்ஜி ரஹ்மதாபாத் இடுகாடு பகுதியில் வைத்து மும்பை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர் தங்கியிருந்த டோங்க்ரி பகுதி வீட்டில் இருந்து கிட்டத்தட்ட 15,000 விஷம் கலந்த காப்ஸ்யூல் மாத்திரைகள் மற்றும் மீதமிருந்த விஷப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெயிண்டிங் தொழில் செய்து வரும் பிரேம்ஜி புனேவின் விமான் நகரை சேர்ந்தவர் ஆவார்.
இவரது தாய் மற்றும் சகோதரி ஈரானில் வசித்து வரும் நிலையில், கடந்த 12 மாதங்களில் மட்டும் 19 முறை ஈரான் மற்றும் ஈராக் நாட்டிற்கு பயணம் செய்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதை ATS மற்றும் மத்திய விசாரணை அமைப்புகள் விசாரித்து வருகின்றன.
![]()