காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் மரபணு மாதிரிகளைச் சேகரித்துப் பாதுகாக்க எந்த முயற்சியும் இல்லை

மரபணு தொடர்பான விடயத்தில், இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமோ அல்லது ஏனைய அரச நிறுவனங்களோ காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்களின் மரபணு மாதிரிகளைச் சேகரித்து, அதனைப் பாதுகாக்கும் செயற்பாடுகள் எதனையும் முன்னெடுக்கவில்லை என்று செம்மணி புதைகுழி வழக்கில் பாதிக்கப்பட்டோர் சார்பாக முன்னிலையாகும் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார்.
செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்ந்து எடுக்கப்படும் மனித என்புத் தொகுதிகள் மீதான மரபணுப் பரிசோதனைகள் மற்றும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அடையாளம் காணப்படும் என்புத் தொகுதிகளை நிலத்திலிருந்து அகழ்ந்து எடுப்பது என்பது முதற்கட்டத் தனித்துவமான ஒரு செயற்பாடாகும். முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதை குழியிலும் முதற்கட்டமாக என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டன.அதன் பிற்பாடு, அந்த என்பு மாதிரிகளை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்வது என்பது இரண்டாவது நடவடிக்கையாகக் காணப்படுகின்றது.இந்த இரண்டாவது நடவடிக்கையின் போதே அகழ்ந்து எடுக்கப்பட்ட என்புத்
தொகுதிகள் முழுமையாக ஆராயப்பட்டு, அந்த மனிதர்களின் வயது, பாலினம் மற்றும் அவர்களின் இறப்புக்கான துல்லியமான காரணங்கள் கண்டு பிடிக்கப்படும். அத்துடன், அகழ்ந்து எடுக்கப்படும் என்புத் தொகுதிகளினுடைய கால எல்லை பற்றி தொல்லியல் திணைக்களத்தால் அறிவியல் அறிக்கை ஒன்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
![]()