இலங்கை

இறுதி யுத்தத்தில் சீன ஆயுதங்கள் – முன்னாள் கடற்படை தளபதியை விசாரியுங்கள் – வேலன்சுவாமிகள் கோரிக்கை!

இறுதி யுத்தத்தின் போது சிறீலங்கா அரசுக்கு கொழும்பு மற்றும் காலியில் அமைந்திருந்த இரு களஞ்சியங்கள் ஊடாக சீன ஆயுதங்களை வழங்கியமை தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஜகநாத் கொலம்பகேயை சர்வதேச பொறிமுறை ஊடாக விசாரணை செய்ய வேண்டும் என தவத்திரு வேலன் சுவாமிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கேட்டு இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளார்கள்.

இந்த தமிழின படுகொலையை நிகழ்த்திய சிறீலங்கா அரசுக்கு இலங்கையில் வைத்தே சீன இரு இடங்களில் இருந்து ஆயுதங்கள் வழங்கப்பட்டதாக முன்னாள் கடற்படை தளபதி கொலம்பகே கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்திருக்கிறார்.

அவருடைய கருத்து மிகவும் பாரதூரமானது தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு மேற்கொண்ட இன அழிப்புக்கு பயன்படுத்தப்பட்ட இரசாயன ஆயுதங்கள் தொடர்பில் ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தது.

அது மட்டுமல்லாது இறுதி யுத்தத்தில் பாவிக்கப்பட்ட கிளஸ்டர் மற்றும் பொஸ்பரஸ் குண்டுகள் எங்கிருந்து பெறப்பட்டது யார் அதை வழங்கியிருப்பார்கள் என்பது தொடர்பிலும் முன்னாள் கடற்படை தளபதியை சர்வதேச நீதியாக விசாரணை செய்ய வேண்டும்.

செம்மணியில் மனித எலும்புக்கூடுகள் சுமார் 380 ஐ தாண்டி உள்ள நிலையில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு செம்மணி ஆதாரமாக இருக்கிறது.

அதேபோன்று முள்ளிவாய்க்காலிலும் தமிழ் மக்கள் கொத்து கொத்தாக அழிக்கப்பட்டார்கள் அது தொடர்பிலும் சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button