தென்னாப்பிரிக்காவில் நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு ; 3 பெண்கள் உட்பட 12 பேர் உயிரிழப்பு

தென்னாப்பிரிக்காவில் ஜோஹன்னஸ்பா்க் நகரின் கிளீவ்லேண்ட் புறநகர் பகுதியில் இடம்பெற்ற கொடூர துப்பாக்கிச் சூட்டில் 3 பெண்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளதாக தென்னாப்பிரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தற்காலிக குடியிருப்புகள் அதிகம் காணப்படும் பகுதியில் வெள்ளை நிற மினி வேனில் வந்த சுமார் 10 பேர் கொண்ட ஆயுதக் கும்பல், அங்கிருந்த மக்கள் மீது திடீரென கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 9 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலை மேற்கொண்டவர்கள் சம்பவத்தின் பின்னர் அதே வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்காக விசேட காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டு தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண காவல்துறை ஆணையாளர் Tommy Mthombeni தெரிவிக்கையில், அந்தப் பகுதியில் சட்டவிரோத சுரங்கக் கும்பல்களின் செயற்பாடுகள் அதிகமாக இருப்பதால், இந்தத் தாக்குதலுடன் அவை தொடர்புடையிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
தென்னாப்பிரிக்காவில் அண்மைக்காலமாக இதுபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், குற்றச்செயல்களை கட்டுப்படுத்த முக்கிய பகுதிகளில் ராணுவம் நிலைநிறுத்தப்பட்டிருந்த போதிலும் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
![]()