யாழில் வெசாக் கூடு அழிப்பானது தெற்கில் இனவாதத்தை தூண்டவே; சிங்கள மக்கள் ஏமாந்துவிடக் கூடாது

யாழ்.பல்கலைக்கழகத்தில் வெசாக் கூடுகள் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருசில சிங்கள இனவாதிகள் கொண்டு செல்லும் போலிப் பிரசாரத்துக்கு சிங்கள மக்கள் ஏமாந்துவிடக்கூடாது. தமிழ், சிங்கள மாணவர்களே இணைந்தே பல்கலைக்கழகத்தில் வெசாக் பந்தல் நிர்மாணித்தார்கள் என மக்கள் போராட்ட அமைப்பின் ஏற்பாட்டாளர் துமிந்த நாகமுவ தெரித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு த்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில், வெசாக் தினத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த வெசாக் கூடு அழிக்கப்பட்டுள்ள சம்பவத்தை அடிப்படையாக்கொண்டு சிலர் இனவாத பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக சமூக வலைத்தளங்களை மேற்கொண்டுவரும் சிலர் தங்களது சமூகவலைத்தளத்தை பார்ப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்வதற்காக இவ்வாறான போலி பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். அதனால் ஒருசில சிங்கள இனவாதிகள் மேற்கொண்டுவரும் இவ்வாறான போலி பிரசாரங்களுக்கு சிங்கள மக்கள் ஏமாந்துவிடக்கூடாது.
அதேநேரம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த வெசாக் வெளிச்சக்கூடு, பல்கலைக்கழகத்தில் இருக்கும் தமிழ் சிங்கள மாணவர்கள் இணைந்தே மேற்கொண்டுள்ளனர். இந்த வெளிச்சக் கூடுகளில் ஒரு வெளிச்சக்கூடே தீ வைத்து எரிக்கப்பட்டிருக்கிறது. இந்த செயலை வெளிப்பிரதேசத்தில் இருக்கும் சிலர் பல்கலைக்கழகத்தில் இருக்கும் ஒருசிலருக்கு பணம் கொடுத்து, இனவாதத்தை துண்டுவதற்கே மேற்கொண்டுள்ளதாக அங்குள்ள தமிழ் மக்கள் தெரிவிக்கிறார்கள். இதுதான் அங்குள்ள தமிழ் மக்களின் நிலைப்பாடாகும்.
ஆனால் கொழும்பில் இருக்கும் சிலர் இந்த சம்பவத்தை பூதாகரமாக்கி, தமிழ் மக்கள் எமது வெசாக் வெளிச்சக்கூடுகளை அழித்துள்ளதாக பெளத்தர்களை தூண்டும் வகையில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.ஆனால் தமிழ் மக்களின் உண்மையான நிலைப்பாட்டை அவர்கள் வெளிப்படுத்துவதில்லை. அதேநேரம் இந்த சம்பவம் தொடர்பில் யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, இது இனவாதத்தை தூண்டுவதற்காக ஒருசிலரால் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் என்றும் இந்த சம்பவத்தை கண்டிப்பதாக தெரிவித்திருக்கிறது.
அதேநேரம் தோற்றுப்போன அரசியல்வாதிகள் மீண்டும் நாட்டுக்குள் இனப்பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். தமிழ் மக்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்வது, ஒரு காலத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சிங்கள மக்களை தூண்டிவிட்டு, முஸ்லிம் மக்கள் தொடர்பில் அவர்களுக்கு சந்தேகங்களை ஏற்படுத்தி, இனவாதத்தை பரப்பி, ஜனாதிபதி தேர்தல் ஒன்றை வெற்றிகொண்டார்கள். ஆனால் அவ்வாறு வெற்றிபெற்ற ஜனாதிபதியும் இல்லை. அந்த கட்சியும் வீழ்ச்சியடைந்துள்ளது. அந்த சதித்திட்டத்துக்கு பங்காளியாக இருந்தவர்களின் தலைவர் தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீீழ் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
யாழ்ப்பாணத்தில் இனவாதத்தை தூண்டி அடுத்த தேர்தலில் வாக்குகளை சேகரித்துக்கொள்ள வேண்டிய தேவை யாருக்காவது இருக்கலாம். அதற்காகத்தான் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இவ்வாறான சம்பவம் ஒன்றை திட்டமிட்டு ஏற்படுத்தி இருப்பதற்கு இடமிருப்பதாகவும் தெரிவித்தார்.
![]()