இலங்கை

முல்லைத்தீவு பொலிஸார் ஆக்கிரமித்துள்ள தனியார் காணியை விடுவிக்க வலியுறுத்திய ரவிகரன்!

முல்லைத்தீவு பொலிஸ்நிலையம் அமைந்துள்ள தனியார் காணி உடனடியாக விடுவிக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் வலியுறுத்தலையடுத்து குறித்த காணியை விடுவிப்பதற்கு பொலிசார் மூன்றுமாத காலஅவகாசம் கோரியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு பொலிஸ்நிலையம் அமைந்துள்ள காணியை எப்போது விடுவிக்கப்போகின்றீர்கள். அந்தக்காணி மு.நாகம்மா என்பவருக்குரிய ஒரு தனியார் காணியாகும்.

குறித்த காணி விடுவிப்புத் தொடர்பாக மாகாணசபைக் காலத்திலும் வலியுறுத்தியிருக்கின்றேன். இருப்பினும் இதுவரை குறித்த காணியை விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் அந்தக்காணியை விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காணி உரிமையாளர்கள் என்னிடம் முறையிட்டுள்ளனர்.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் விமானப்படையினர், கடற்படையினர், இராணுவத்தினர், சிவில் பாதுகாப்புப் படையினரின் வரிசையில் பொலிசாரும் மக்களின் காணிகளை அபகரித்து வைத்திருக்கின்றனர்.

எனவே மக்களுடைய அந்த தனியார் காணியை முல்லைத்தீவுப் பொலிசார் உடனடியாக விடுவிக்கவேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.

இதன்போது இன்னும் மூன்றுமாத காலஅவகாசம் கோரிய பொலிஸ் அதிகாரி, இன்னும் மூன்று மாதத்திற்கு பிற்பாடு குறித்த காணியை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button