யோகர்சுவாமி எங்கள் ஆன்மீகச் சொத்து!… கவிதை…. ஜெயராமசர்மா

நல்லூரான் திருவடியில் நாளும்பல அதிசயங்கள்
நாடிவரும் அனைவருக்கும் நன்மைபல வருகிறது
நல்லூரின் மண்நடந்தால் நம்வினைகள் பறந்தோடும்
என்றெண்ணிப் பலபேரும் நாளுமங்கே வருகின்றார்
தேரடியில் தெய்வவருள் செறிந்தங்கே இருக்கிறது
தேரடியில் வில்வமரம் யாவருக்கும் தெரிந்ததுவே
மரத்தடியில் பலரமர்வார் மனமெல்லாம் பலநினைப்பில்
மால்மருகன் காத்திடுவான் என்பதவர் நினைப்பாகும்
பற்றற்று வந்தமர்வார் பக்குவத்தைத் தேடிடுவார்
பக்குவத்தை நாடிடுவார் பைத்தியமாய் தெரிந்திடுவார்
பார்ப்பவர்கள் விசரென்பார் பரிகசித்து நின்றிடுவார்
ஆனாலும் அம்மனிதர் விசராகத் திரிந்திடுவார்
திட்டுவார் கல்லெறிவார் மண்ணெடுத்தும் எறிந்திடுவார்
கிட்டவே போவதற்கு யாவருமே அஞ்சிடுவார்
செல்லப்பா திருநாமம் கொண்டவந்த மனிதர்க்குள்
தேடரிய பொக்கிஷங்கள் பொதுந்துமே கிடந்தனவே
செல்லப்பர் பொக்கிஷத்தைத் தேடிவந்தார் ஒருவர்
செல்லப்பரோ அவரைத் திட்டியே தீர்த்தார்
வந்தவரோ வேதனையால் வதைபட்டு உழன்றார்
மனஞ்சோர்ந்து போகாமல் பின்தொடர்ந்து நின்றார்
வேதனையும் சோதனையும் வெற்றியினைக் கொடுக்க
தெடிவந்த மாமனிதர் யோகர்சுவாமி ஆனார்
தேடரிய பொக்கிஷங்கள் செல்லப்பா ஈந்தார்
தெளிந்தநற் குருவாக யோகர்சுவாமி மலர்ந்தார்
கொழும்புத்துறைக் கொட்டிலிலே யோகர்சுவாமி அமர்ந்தார்
எண்ணரிய தத்துவங்கள் இதயந்தொடக் கொடுத்தார்
இனங்கடந்து மதங்கடந்து மொழிகடந்து நின்றார்
எல்லோரும் விடிவுபெற ஏற்றபல செய்தார்
பற்றற்று நின்றார் பக்குவமாய் இருந்தார்
பலருக்கும் வழிகாட்டும் விளக்காக ஒளிர்ந்தார்
தேடிவரும் அனைவரது தேவைகளை உணர்ந்து
வாடியவர் செல்லாமல் மனமகிழச் செய்தார்
படித்தவரும் ஒன்றே பாமரரும் ஒன்றே
பாரபட்சம் யோகர் சுவாமி பார்ப்பதேயில்லை
கொண்டுவரும் அத்தனையும் பங்குபோட்டுக் கொடுப்பார்
கொடுக்கின்றார் மனமுடைய எதையுமவர் செய்யார்
திருமுறைகள் படிப்பார் தித்திக்கப் படிப்பார்
வருமடியார் இணைய மனமுருகிப் படிப்பார்
சிவதொண்டன் நிலையம் தியானத்தின் நிலையம்
சுவாமிகளை என்றும் நினைக்கவைக்கும் நிலையம்
ஈழத்தின் ஞானி இணையில்லா ஞானி
எல்லோரும் நினைக்க வாழ்ந்திட்ட ஞானி
யோகர்சுவாமி எங்கள் ஆன்மீகச் சொத்து
ஆன்மீகச் சொத்தை அகமிருத்தி வைப்போம் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா
![]()