இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் விஜய் நேற்று புதன்கிழமை மாலை சந்தித்துப் பேசிய போது கோரிக்கையை விடுத்துள்ளார்.
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்னர், முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக சென்னையில் இருந்து நேற்றுக் காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
2 நாள் பயணமாக டெல்லி வந்த அவரை, டெல்லி தமிழ்நாடு இல்லத்தில், தமிழக தலைமைச் செயலர் சாய் குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து, பொலிஸ் அணிவகுப்பு மரியாதையும் விஜய்க்கு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது வலியுறுத்த வேண்டிய முக்கிய விஷயங்கள் தொடர்பாக முதல்வர் விஜய், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து, அவர் பிரதமரைச் சந்திக்க புறப்பட்டுச் சென்றார்.
பிரதமர் மோடியைச் சந்தித்த முதல்வர் விஜய், அவருக்கு பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். புதிதாக கட்டப்பட்டுள்ள சேவா தீர்த் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
தொடர்ந்து இருவரும் தமிழ்நாடு மற்றும் தேசிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். சுமார் 10 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின்போது,தமிழகத்தில் தமிழ் தாய் வாழ்த்துக்கு முதலிடம், மேகேதாட்டு அணை, இருமொழி கொள்கை, அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கான பிஎம்ஸ்ரீ திட்ட நிதி, தமிழகத்துக்கு நிலுவையில் உள்ள மத்திய நிதி, தமிழகத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சி மேம்பாடு .இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களது விடுதலை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வர் விஜய், பிரதமர் மோடியிடம் நேரில் வழங்கினார்.
இந்தச் சந்திப்பு நிறைவடைந்ததை அடுத்து அவர் மீண்டும் தமிழ்நாடு இல்லத்துக்கு திரும்பினார்.
பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பை அடுத்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் முதல்வர் விஜய் சந்தித்தார்
மேலும், இந்தப் பயணத்தின்போது காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தியையும் முதல்வர் விஜய் இன்று சந்திக்கவுள்ளார்.
![]()