யாழ்ப்பாணம் – கொழும்பு நெடுஞ்சாலை தேவையில்லை – முன்னாள் அமைச்சர் பாட்டலி

கொழும்பு தொடக்கம் யாழ் வரையான நெடுஞ்சாலை திட்டத்துக்கு பதிலாக , கொழும்பு – குருநாகல் – தம்புள்ளை – ஹபரண ஊடாக திருகோணமலையை இணைக்கும் புதிய பொருளாதார வழித்தடத்தை உருவாக்கினால் மட்டுமே நாட்டின் உண்மையான பொருளாதாரப் பலனை அடைய முடியும் என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (25) நடைபெற்ற அவரது புதிய நூலான ‘எக்கட கெடும’ (ஒன்றுகூடிய மோதல்) நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், உலக அரசியல் சதுரங்கத்தில் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய வல்லரசுகளின் மூலோபாய வேறுபாடுகளைக் கவனத்தில் கொண்டு, எதிர்கால உலகின் அதிகாரப் போட்டி மிகவும் தீவிரமடையப் போகிறது.
ஆசியாவுக்கான பிரதான நுழைவாயில்
1820 ஆம் ஆண்டு வரை உலகப் பொருளாதாரத்தின் ஈர்ப்பு விசை ஆசியாவிலேயே இருந்தது, அது மீண்டும் ஆசியாவை நோக்கியே நகர்கிறது. ராபர்ட் காப்லானின் ‘மன்சூன்’ நூலில் குறிப்பிட்டவாறு, 21 ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான கடல் பிராந்தியமாக இந்தியப் பெருங்கடல் உருவெடுக்கும் நிலையில், இலங்கை தனது நகர்வுகளை மிகவும் கவனமாக முன்னெடுக்க வேண்டும்.

கொழும்பை மட்டுமே மையமாகக் கொண்டு அபிவிருத்தியை முன்னெடுக்கும் பழைய முறையை நாம் மாற்ற வேண்டும்.
கொழும்பு தொடக்கம் யாழ் வரையான நெடுஞ்சாலை திட்டத்துக்கு பதிலாக , கொழும்பு – குருநாகல் – தம்புள்ளை – ஹபரண ஊடாக திருகோணமலையை இணைக்கும் புதிய பொருளாதார வழித்தடத்தை உருவாக்கினால் மட்டுமே நாட்டின் உண்மையான பொருளாதாரப் பலனை அடைய முடியும்.
திருகோணமலையை ஆசியாவுக்கான பிரதான நுழைவாயிலாக மாற்ற வேண்டும். நான் அமைச்சராக இருந்தபோது சம்பந்தன் உள்ளிட்ட வட-கிழக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு நிறுவனத்தின் வல்லுநர்களுடன் இணைந்து இந்தத் திட்டத்தை முன்னெடுக்க எடுத்த முயற்சிகள் இன்றும் பொருத்தமானவை.
ஆசியான் நாடுகளுடன் நேரடிப் பொருளாதாரப் பிணைப்பை ஏற்படுத்தி, ஏற்றுமதி மற்றும் கைத்தொழில் துறைகளை வலுப்படுத்துவதே இலங்கையை மீட்கும் ஒரே வழி.
2017ஆம் ஆண்டின் தேசிய பௌதிகத் திட்டமிடல் மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் முன்வைக்கப்பட்ட கொள்கை விளக்கங்களின் பொருளாதாரத் தர்க்கங்களை இன்றும் நான் முன்மொழிகிறேன்.

இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பு குறித்து ஆழமான விவாதங்களையும் அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட வல்லது நாடுகளின் ஏகாதிபத்திய முறையை விமர்சிக்கும் உலக அரசியலாக முன்வைத்துள்ள எனது இந்த நூல், வெறும் அரசியல் பதிவல்ல, இது இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைக்கக்கூடிய ஒரு கொள்கை வரைபடம்.
எனவே, வாசகர்கள் இந்த ஆழமான ஆய்வுகளை வாசித்து, விவாதிப்பதன் மூலம் புதியதொரு அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க முன்வர வேண்டும் என்றார்.
![]()