இலங்கை

அரசின் இயலாமையால் சகல துறைகளும் முடக்கம்- பாணந்துறை பேரணியில் நாமல் சாடல்!

பொதுமக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசின் வாக்குறுதிகள் அனைத்தும் வேகமாக உருகி மறைந்து வருகின்றன என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

தனது நிர்வாகத் திறமையின்மைகளை மூடிமறைப்பதற்காக மக்கள் மீது அரசு எல்லையற்ற வரிச்சுமைகளைத் திணித்து வருகின்றது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

பாணந்துறையில் நேற்று நடைபெற்ற மக்கள் பேரணிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் தற்போதைய ஆட்சியாளர்களின் மக்கள் விரோதக் கொள்கைகள் குறித்து இவ்வாறான கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசின் முறையற்ற மற்றும் ஒப்பிட முடியாத அரசியல் கொள்கைகள் காரணமாக, நாட்டின் ஒட்டுமொத்தப் பொதுமக்களின் வாழ்க்கைத்தரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதாக தற்போதைய அரசு வழங்கிய வாக்குறுதிகள் இன்று பனிபோல் உருகி மறைகின்றன. அரசு தனது அப்பட்டமான நிர்வாகத் திறமையின்மையை மூடிமறைப்பதற்காக, மக்கள் மீது தாங்க முடியாத அளவுக்கு எல்லையற்ற வரிச்சுமைகளைத் திணித்து வருகின்றது என்பது இரகசியமானதொன்றல்ல. இந்த மக்கள் விரோதச் செயற்பாடுகள் மக்களின் அன்றாட வாழ்க்கையை முழுமையாகப் பாதித்துள்ளன.

அரசின் இயலாமையால் நாட்டின் சகல துறைகளும் முடங்கியுள்ளன. நாட்டின் ஒட்டுமொத்தப் பொதுமக்களுடன் இணைந்து விவசாய சமூகத்தினர், தொழில் வல்லுநர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் வர்த்தகச் சமூகத்தினர் என அனைத்துத் தரப்பினரும் இன்று எவ்வித ஆதரவோ தீர்வுகளோ இன்றி நிர்க்கதியற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தேர்தல் காலத்தில் தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றத் தவறிய தற்போதைய அரசின் மீது நாட்டு மக்கள் இன்று கடுமையான ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் கொண்டுள்ளதை எம்மால் உணர முடிகின்றது.

எமது தாய்நாட்டின் உன்னதமான கலாசாரமும் நாகரிகமும் எந்நேரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

ஒரு நியாயமான சமூகக் கட்டமைப்பில், குழந்தை முதல் முதியவர் வரை நாட்டின் அனைத்துக் குடிமக்களும் சமத்துவமாக மதிக்கப்பட்டு, ஒரே சட்டத்தின் கீழ் நிம்மதியாக வாழ்வதற்கான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்பதே எமது முதன்மையான கொள்கையாகும்.

இறுதியாக, தற்போதைய சவாலான காலகட்டத்திலும் எம் மீது அதீத நம்பிக்கை வைத்து, இன்றைய பாணந்துறை பேரணியில் பெருந்திரளாக ஒன்றிணைந்த அனைத்துப் பொதுமக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளையும் மரியாதையையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button