இலங்கை

அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை வைத்து சுரேஷ் சலே மீது பழிசுமத்துவது அரசியல் சதி! சரத் வீரசேகர சாடல்

வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள அசாத் மௌலானாவின் போலியான வாக்குமூலத்தின் அடிப்படையில், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதக் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சுரேஷ் சலே என்று பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ் நீதிமன்றத்தில் குறிப்பிடுவதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான சரத் வீரசேகர தெரிவித்தார்.

முற்றிலும் அரசியல் நோக்கங்களை இலக்காகக் கொண்டே இந்த அபாண்டமான குற்றச்சாட்டு தற்போதைய அரசால் முன்வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்

கொழும்பில் நேற்று(24) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்விடயம் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு தலைவரான சுரேஷ் சலே எனச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளமை அரசியல் உள்நோக்கம் கொண்டது.

பிரான்ஸ் நாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள அசாத் மௌலானா, தனது புகலிடக் கோரிக்கையை வலுப்படுத்துவதற்காகக் கூறிய கட்டுக்கதைகளையும் வாக்குமூலத்தையும் அடிப்படையாகக் கொண்டே, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ் தற்போது சுரேஷ் சலேவைப் பிரதான சூத்திரதாரியாகச் சித்தரித்துள்ளார்.

இந்தத் தாக்குதலின் உண்மையான பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிம் என்பதும், அவரே தாக்குதல்களை வழிநடத்தினார் என்பதும் இதற்கு முன்னர் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் நடத்தப்பட்ட பல்வேறு பாரிய விசாரணைகள் மற்றும் ஆணைக்குழு அறிக்கைகள் ஊடாகத் திட்டவட்டமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறிருக்கையில், இப்போது திடீரெனப் புதியதொரு விடயத்தைக் நீதிமன்றத்தில் குறிப்பிடுவது ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் தவறாக வழிநடத்தும் ஒரு கீழ்த்தரமான செயற்பாடாகும். தற்போதைய அரசு கொடூரமான உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விவகாரத்தை முழுமையாக அரசியல்மயப்படுத்தியுள்ளது.

தேர்தல் காலத்தில் கத்தோலிக்க சபைக்கும், கத்தோலிக்க மக்களுக்கும் வழங்கிய போலி வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்ற முடியாத நிலையிலேயே அரசு தற்போது இவ்வாறு திசைதிருப்பும் வேலைகளில் ஈடுபட்டுள்ளது.

மிகவும் வேடிக்கையான விடயம் என்னவென்றால், 2019 இல் இந்தக் குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற போது நாட்டின் பாதுகாப்புத் துறையில் மிக முக்கிய உயர் பதவிகளில் இருந்துகொண்டு, தாக்குதல் தொடர்பான புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தும் அதனைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள்தான் இன்று புதிய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

அன்று கடமையைச் செய்யத் தவறியவர்கள் இன்று பிறிதொரு நேர்மையான அதிகாரி மீது பழிசுமத்துவது அப்பட்டமான அரசியல் பழிவாங்கலாகும்.

எனவே, அரசியல் தேவைகளுக்காகப் புலனாய்வுத் துறை அதிகாரிகளைப் பலிக்கடாவாக்குவதை நிறுத்தி, யதார்த்தமான முறையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.” – என குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button