இலங்கை

யுத்தம் இல்லாமையை உறுதிப்படுத்த அதிகாரப் பகிர்வு மிகவும் அவசியம்! ஜனாதிபதி முன் சுமந்திரன் வலியுறுத்து

”நாட்டில் இனிமேல் யுத்தம் ஏற்பட அனுமதிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்றும் தெரிவித்திருக்கின்றார். நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படக்கூடாது என்றால் அதற்கு அர்த்தமுள்ள அதிகார பகிர்வு விரைந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை நான் ஜனாதிபதிக்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.”

– இவ்வாறு மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பொது நூலகக் கட்டடத்தைத் திறக்கும் நிகழ்வில் உரையாற்றிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதிக்கு முன்னர் உரையாற்றிய சுமந்திரன் அச்சமயம் இவ்விடயங்களைச் சுட்டிக்காட்டினார்.

அவர் தமது உரையில் கூறியவை வருமாறு:-

“எங்களுடைய தமிழரசுக் கட்சியின் ஆளுகைக்கு உட்பட்ட மட்டக்களப்பு மாநகர சபையின் பொது நூலகத்தைத் திறந்து வைப்பதற்கான அழைப்பு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பப்பட்ட போதே அவர் இந்த நிகழ்வில் பங்குபற்ற வருவார் என்று நான் உறுதியாக நம்பினேன். அதற்குக் காரணம் உண்டு. அவர் அடிக்கடி யாழ்ப்பாணம் பொது நூலகம் பற்றிப் பேசுபவர். யாழ்ப்பாணம் மக்கள் அந்த நூலகத்துக்குள் நுழையும் போது செருப்புகளைக் கழற்றி வைத்துவிட்டு உள்ளே நுழைவார்கள், நூலகத்தைக் கோயில்போல் பயன்படுத்துவார்கள் என்று அவர் அடிக்கடி கூறியிருக்கின்றார்.

அண்மையில் கூட கம்பன் விழாவில் தாம் ஆற்றிய உரையிலும் நூலகத்தையும் அதன் பெறுமதியையும் சிலாகித்து அவர் பேசியிருந்தார். ஆகையினால் நூலகத் திறப்பு விழாவுக்கு எங்கள் அழைப்பை ஏற்று அவர் கட்டாயம் வருவார் என்று நாங்கள் நம்பினோம். அந்த அழைப்பை ஏற்றமைக்காக அவருக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

இங்கு நாடாவை வெட்டி பொது நூலகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, அது தொடர்பான நினைவுக்கல்லின் திரை நீக்கத்தை என்னைச் செய்யும்படி கேட்டுக்கொண்டார். ஒருவகையில் இது எங்கள் பணிகளை நாங்கள் எங்களுக்குள் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு முன்மாதிரி. நாட்டின் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு முன்னுதாரணம் – அடையாளம் என்று நான் நினைக்கிறேன்.

நேற்றுக் கூட ஜனாதிபதி உரையாற்றிய சமயம் இந்த நாட்டில் இனியொரு யுத்தம் நடைபெற அனுமதிக்க மாட்டேன் என்று உறுதி கூறியிருந்தார்.

அவர் ஆயுதம் ஏந்திப் போராடிய ஒரு குழுவில் இருந்து வந்தவர். நாங்கள் ஆயுதமேந்திப் போராடிய ஒரு மக்கள் கூட்டம். இரு தரப்பினருமே இனி யுத்தம் புரிவதில்லை, அதை வரவேற்பதில்லை என்ற தீர்மானத்துக்கு வந்திருக்கின்றோம்.

ஆனால், நாட்டில் இனி யுத்தம் ஏற்படக் கூடாது என்றால், அதற்கு அர்த்தமுள்ள அதிகாரப் பயிர்வு செய்யப்பட வேண்டும். அதற்கான அடையாளமாகவே இன்று பொது நூலகத்தை நாடா வெட்டி திறந்து வைப்பதையும் அதை ஒட்டிய நினைவுக்கல்லை திரை நீக்கம் செய்து வைக்கின்ற விடயத்தையும் நாங்கள் பகிர்ந்து கொண்டோம் என்று நான் நினைக்கின்றேன்.

அந்த அடிப்படையில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டிய அவசியத்தை நான் ஜனாதிபதிக்கு ஞாபகமூட்ட விரும்புகின்றேன்.” – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button