விடுதலைப் புலிகளை நினைவுகூர இடமளிக்கமாட்டோம்: ஜனாதிபதி உறுதியளிக்க வேண்டும்! உதய கம்மன்பில பகிரங்கம்

தான் ஆட்சியில் இருக்கும் வரை இனி ஒருபோதும் இந்த நாட்டில் விடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதற்கு இடமளிப்பதில்லை என்ற உறுதிமொழியை ஜனாதிபதி வழங்கவேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.
பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இராணுவ வீரர்களுக்கு உண்மையாகவே கௌரவம் செலுத்த ஜனாதிபதிக்குத் தேவைப்பாடு இருக்குமாயின், ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகிய இருவரை முன்னிறுத்தி பிரிவினைவாதிகளைத் திருத்தியமைப்பதற்காக முன்னெடுக்கப்படும் இந்த இராணுவ வீரர்களின் வேட்டையை உடனடியாக நிறுத்த வேண்டும். அதுவே இராணுவ வீரர்களுக்கு செலுத்தும் உண்மையான நன்றிக்கடனாகும்.
அதுமட்டுமன்றி, ஜனாதிபதி இராணுவ வீரர்களின் நினைவேந்தல் நிகழ்வுக்கு சமுகமளிப்பதற்கு முன்னர், பொய்க் குற்றச்சாட்டுகள் என மிக நன்றாக உறுதிப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மற்றும் முன்னாள் அமைச்சர் ஆகிய இருவரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுவிட்டு இந்த இராணுவ வீரர்களின் நினைவேந்தல் நிகழ்விற்கு வந்திருந்தால், அதுவே நீங்கள் உண்மையாகவே இராணுவ வீரர்களை நினைவுகூருவதாக அமைந்திருக்கும்.
வடகிழக்கு எங்கும் விடுதலைப் புலிகளின் நினைவேந்தல்கள் நடத்தப்பட்டதை நாம் கண்டோம். அன்று வடகிழக்குக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த புலிகளின் நினைவேந்தல்கள், இன்று இலங்கை முழுவதிலும் உள்ள ஏனைய பகுதிகளுக்கும் பரவியுள்ளன. இவ்வாறான பலவீனமான, முதுகெலும்பற்ற ஒரு தலைவரின் கீழ் மாத்திரமே ஒரு நாட்டுக்குள் பயங்கரவாதிகளைப் பகிரங்கமாகவும் சுதந்திரமாகவும் நினைவுகூர முடியும்.
அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்ட, மக்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்த நாசி கட்சியின் தலைவர் ஹிட்லரையோ அல்லது நாசி கட்சியையோ நினைவுகூருவதற்கு இன்றைய ஜெர்மனியில் எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை. அதேபோன்று, நவீன உலக வரலாற்றின் மிகப் பெரிய பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய அல்கொய்தா பயங்கரவாதிகளை அமெரிக்காவில் நினைவுகூருவதற்கு அங்கு இடமளிப்பதில்லை.
இன்று முள்ளிவாய்க்காலில் மாத்திரமன்றி, ஒட்டுமொத்த நாடும் புலிகளின் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுதான் இந்த நினைவேந்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. மஞ்சள் மற்றும் சிவப்பு நிறப் புலிக்கொடிகளை ஏந்தி அவர்கள் நினைவுகூரும் போது, அந்தப் புலிகளால் தமது உயிர்களை இழந்த, கை கால்களை இழந்த எமது நாட்டு இராணுவ வீரர்களையும் ஒட்டுமொத்த தேசத்தையும் பலவீனமாக அதனைப் பார்த்துக் கொண்டிருக்குமாறு இந்த அரசாங்கம் நிர்பந்தித்துள்ளது.
அத்துடன் நின்றுவிடாமல், புலிகளைச் சுதந்திரமாக நினைவு கூற இடமளிப்பது ஒருபுறமிருக்க, எமக்கு உயிர்பிச்சை அளித்து, ஜனாதிபதிக்கு யாழ்ப்பாணத்தில் சுதந்திரமாக நடைப்பயிற்சி செல்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்த எமது நாட்டு இராணுவ வீரர்களை நினைவு கூரும் தேசப்பற்றாளர்களுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி தனது அதிகாரிகளைப் பயன்படுத்தியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இராணுவ வீரர்களின் நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்தச் சென்ற போது, பயங்கரவாதிகளை ஒடுக்குவது போன்ற பாணியிலேயே பொலிஸார் அவரைத் தடுக்க முயன்றதை நாம் கண்டோம். நன்றியுள்ள மனிதர்கள் இராணுவ வீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்துவது தண்டனைக்குரிய குற்றமா, கைகளில் விலங்கிடப்படும் குற்றமா அல்லது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் குற்றமா என்று நாம் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்புகின்றோம்.
எனவே ஜனாதிபதி, நீங்கள் ஒன்று நாட்டின் பக்கம் நிற்க வேண்டும், அல்லது பயங்கரவாதிகளின் பக்கம் நிற்க வேண்டும். பயங்கரவாதிகளுடன் நயவஞ்சகமாக உறவாடிக்கொண்டு, நாட்டின் பக்கம் நிற்பது போன்ற கபடத்தனமான இருமுகக் கொள்கையை இனிமேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு இந்த நாட்டு மக்கள் உங்களுக்கு இடமளிக்கத் தயாராக இல்லை.
அதனால், இரண்டு பக்கமும் கால்களை வைத்துக் கொண்டிருக்காமல், நாட்டின் உண்மையான முப்படைத் தளபதியாக உங்கள் இரு கால்களையும் நாட்டின் பக்கமே நிலைநிறுத்துமாறு நாம் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.
![]()