இலங்கை

முள்ளிவாய்க்கால் கண்ணீர் ஓயாது:அந்த அவலத்தை வைத்து யாரும் அரசியல் செய்யக்கூடாது- தமிழர் விடுதலைக் கூட்டணி!

முள்ளிவாய்க்கால் கண்ணீர் ஓயாது. அந்த முள்ளிவாய்க்கால் அவலத்தை வைத்து யாரும் அரசியல் செய்யக்கூடாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும், தேசிய ஒருங்கிணைப்பாளருமான செ.சுதாகரன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்கால் நினைவேந்தல் குறித்து வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

இலங்கைத் தமிழர் வரலாற்றில் மட்டுமல்லாது, உலகெங்கும் வாழும் தமிழர்களின் மனங்களிலும் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற சோகம் எம் உயிர் உள்ளவரை மறக்க முடியாததாகும். இன முரண்பாடுகள் உருவானதன் காரணமாக இலங்கை அரசுப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கொடிய யுத்தம் நடைபெற்றது. இந்த நாட்டின் விலைமதிப்பற்ற இளைஞர்கள் தமது இளம் வயதிலேயே உயிரிழந்தார்கள். பொருளாதார அழிவு மதிப்பிட முடியாத அளவிற்கு இருந்தது. அதன் தாக்கம் இன்றும் தொடர்கிறது.

 

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் நெருங்கிக் கொண்டிருந்த போது மக்களின் இழப்புகள் அதிகரித்துக் கொண்டே இருந்தன. பெருமளவான மக்கள் மரணமடைந்தார்கள். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தார்கள். இலட்சக்கணக்கானோர் மரணத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி இரு தரப்பினரிடமும் யுத்த நிறுத்தத்தை வலியுறுத்திக் கொண்டிருந்தது.

 

தமக்கு வாக்களித்த மக்களை காப்பாற்ற அன்றைய தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தவறியதுமட்டுமல்லாது, பல்வேறு நாடுகளுக்குச் சென்று ஒளிந்து கொண்டார்கள். ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி எந்த ஆசனங்களும் இல்லாத நிலையிலும் ஒரு கட்சியாக தனது கடமையைச் செய்தது.

 

இறுதி யுத்தத்தின் போது அப்போதைய அரசுத் தலைவராக இருந்த மகிந்த ராஜபக்ஷ அனைத்து தமிழ்க் கட்சிகளையும் சந்திப்பதற்காக அலரி மாளிகைக்கு அழைத்தார். அந்தச் சந்தர்ப்பத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியும் கலந்து கொண்டது. அப்போது முள்ளிவாய்க்காலில் வெறும் 75,000 பேர் மட்டுமே உள்ளனர் என்றும், அவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே அப்பகுதியில் இருந்த அதிகாரிகள் மூலம் தகவல்களைத் திரட்டி வைத்திருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர், முள்ளிவாய்க்கால் பகுதியில் 325,000 மக்கள் அகப்பட்டுள்ளதாகக் கடுமையாக வாதிட்டார்.

 

ஆனால் அரச ஆதரவு தமிழ் குழுக்கள், கூட்டணித் தலைவர் புலிகளின் தகவல்களை வைத்து பேசுகிறார் என அவரை ஏளனமாகப் பார்த்தார்கள். இருப்பினும் அவர் சிறிதும் தயக்கமின்றி சனாதிபதியுடன் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டார்.

 

இறுதியில் கோபமடைந்த மகிந்த ராஜபக்ஷ, தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவரை நோக்கி, ‘சங்கரி நான் 325,000 மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களையும் மருந்துப் பொருட்களையும் அனுப்புகிறேன். அவர்களிடம் சொல்லுங்கள் — அவற்றைப் பயன்படுத்திவிட்டு எமது படையினருக்கு எதிராகப் போராடும்படி!’ என்று கூறிவிட்டு தனது இரண்டு கைகளையும் மேசையில் அடித்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார். இதை அனைத்து ஊடகவியலாளர்களும் அரச சார்பு தமிழ்க் கட்சித் தலைவர்களும் (சித்தார்த்தன், கருணா, பிள்ளையான், டக்ளஸ்) பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

 

இறுதி யுத்தம் நிறைவடைந்த போது மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியே வந்தார்கள். அதேவேளை, மன்னார் பேராயரின் கருத்துப்படி 146,000 பொதுமக்கள் உயிரிழந்திருந்தார்கள் என்பதும் வேதனையானதோடு யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.

 

அன்று மகிந்தவுடன் தர்க்கப்பட்டு உண்மையை வெளிப்படுத்தாமல் இருந்திருந்தால், 75,000 மக்கள் கூட உயிருடன் வந்து சேர்ந்திருப்பார்களா என்பது தெரியாது. இந்த பாரிய இன அழிவைத் தடுக்க தமிழர் விடுதலைக் கூட்டணி சரியான சந்தர்ப்பத்தில் முயற்சி எடுத்தது. ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் என்ன செய்தார்கள் என்பதை அண்மையில் கனடாவில் இருந்து அழுது கொண்டு பேசிய ஜயா ஒருவரின் உரை அனைவருக்கும் சான்றாக உள்ளது.

 

முள்ளிவாய்க்கால் அவலம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது எந்தவொரு சிங்களக் கட்சிகளோ அல்லது தமிழ் பேசும் இஸ்லாமியக் கட்சிகளோ அதைக் கண்டிக்கவில்லை. நாம் அன்று தனித்து விடப்பட்ட இனமாக இருந்தோம். பனையேறி விழுந்தவனை மாடேறி மிதித்தது போல், செட்டிக்குளம் தடுப்பு முகாமில் நடைபெற்ற கொடுமைகள் சொல்லில் அடங்காதவை. அப்பாவி இளைஞர்களும் யுவதிகளும் அனுபவித்த துன்பங்கள் நவீன கால கொடுமைகளாக இருந்தன.

 

கொத்துக்கொத்தாக இளைஞர்களையும் யுவதிகளையும் அள்ளிச் சென்றார்கள். இறுதியில் சிலர் விடுவிக்கப்பட்டனர். பலர் காணாமல் ஆக்கப்பட்டவர்களாகி விட்டனர். முள்ளிவாய்க்கால் அவலத்தை வைத்து யாரும் அரசியல் செய்யக்கூடாது. சிலர் அதை ஏகபோக உரிமையாகக் கொண்டாடுவது மட்டுமல்லாது, மீண்டும் தமிழ் மக்களை பிழையான பாதைக்கு இட்டுச்செல்ல முயற்சிக்கின்றார்கள்.

 

தமிழர் மத்தியில் மறக்க முடியாத இந்த சோகமான மாதத்தில், தமிழர் விடுதலைக் கூட்டணி இலங்கை அரசிடமும் சர்வதேச சமூகத்திடமும், விசேடமாக இந்தியாவிடமும், சாத்தியமான அரசியல் தீர்வை வேண்டி நிற்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button