இலங்கை

கொட்டும் மழையில் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் ஆசிரியர்கள் திரண்டு பாரிய போராட்டம்!

வட மாகாணத்தில் இடமாற்றச் சபையின் விதிகளை மீறி, முறையற்ற வகையில் ஆசிரிய இடமாற்றங்கள் வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் ஊழல் அதிகாரிகளால் இடமாற்றச் சபையை மீறி மேற்கொள்ளப்பட்ட ஆசிரிய இடமாற்றங்களைக் கண்டித்து, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில்  கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் பாரிய கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் தீபன் திலீசன், மாகாணக் கல்வி நிர்வாகம் மற்றும் ஆளுநருக்கு எதிராகப் பலத்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்:

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்துடன் இணைந்து ஊழல் கல்வி அதிகாரிகள் வட மாகாணக் கல்வியைத் திட்டமிட்டு அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தங்களுக்கு வேண்டியவர்களையும், ஆளுங்கட்சிக்குச் சார்பானவர்களையும் யாழ்ப்பாண நகரப் பகுதிகளிலேயே தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டு, தீவகம் மற்றும் மருதங்கேணி போன்ற கஷ்டப் பிரதேசங்களில் நீண்டகாலம் சேவையாற்றிய ஆசிரியர்களை மீண்டும் பழிவாங்கும் நோக்குடன் வெளிமாவட்டங்களுக்குத் திட்டமிட்ட முறையில் இடமாற்றம் செய்கின்றனர்.

இந்த முறைகேடான இடமாற்றங்கள் குறித்து வட மாகாண ஆளுநருக்கு எழுத்து மூலம் சுட்டிக்காட்டியும், அவர் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றவே ஆளு துணை நிற்கிறார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் குறித்துப் பேசப்பட்டபோது, “இந்த இடமாற்றத்தை செய்தே தீர வேண்டும்” என ஆளுநர் முண்டியடித்துக்கொண்டு கூறியமை எமக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

யாழ்ப்பாணத்தில் உயர்தர விஞ்ஞானப் பிரிவில் (A/L Science) ஆங்கில மொழி மூலம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர், அந்தப் பாடமே இல்லாத ஒரு கல்வி வலயத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். இதன் பின்னணியில் யாழ்ப்பாணத்தின் உயர்தர விஞ்ஞானப் பிரிவைத் திட்டமிட்ட முறையில் அழிக்கும் சதித் திட்டம் மறைந்துள்ளது.

வெளிமாவட்டங்களுக்கு ஆசிரியர்களைப் பகிர்ந்தளிப்பதை ஆசிரியர் சங்கம் எதிர்க்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், ஆனால் இதுவரை வெளிமாவட்ட சேவையே செய்யாதவர்கள் அரசியல் செல்வாக்கோடு சொகுசாக இருக்கும்போது, கஷ்டப் பிரதேசங்களில் பணியாற்றியவர்களை மீண்டும் மீண்டும் பழிவாங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்தார்.

உரிய முறையில் இந்த இடமாற்றப் பிரச்சினைகள் பரிசீலிக்கப்பட்டு தீர்வு வழங்கப்படும் வரை, இந்தத் தொடர் போராட்டங்கள் ஓயாது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button