இலங்கை

நீதிமன்றத்தை அவமதித்த ரில்வின் சில்வாவை கைது செய்யவேண்டும்! சம்பிக்க பகிரங்கம்

நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பகிரங்கமாக கருத்து தெரிவித்திருந்த மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வாவை கைது செய்யவேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சி  கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டில் 2019 முதல் 2026 ஏப்ரல் வரை நிலக்கரி கொள்வனவு தொடர்பில் ஆராய்ந்து விசாரணை நடத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்திருக்கிறது.

உயர் நீதிமன்ற நீதியரசர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதி என 3 நீதிபதிகளைக்கொண்ட ஆணைக்குழுவை நிறுவி, இவர்களுக்கு 6 மாத காலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேநேரம் நிலக்கரி விசாரணை ஆணைக்குழுவுக்கு சாட்சியம் வழங்க வரும்வரை ஆணைக்குழு காத்திருப்பதாகவும் சம்பிக்க, அஜித், மரிக்கார், சானக்க வருவதில்லையா? என குறிப்பிட்டு ஜனாதிபதியின் ஊடக பிரிவு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. ஆனால் நாங்கள் வாக்குமூலம் வழங்க தயாராகவே இருக்கிறோம்.

ஆனால் மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா அண்மையில் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், நிலக்கரி கொள்வனவு தொடர்பில் தற்போது ஜனாதிபதி விசாரணைக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆணைக்குழு 3மாதங்களில் விசாரணை அறிக்கையை வெளியிடும். அதன்போது எமது தரப்பினர் விடுதலையாகுவார்கள். கடந்த அரசாங்க காலத்தில் இருந்தவர்கள் சிறைக்கு செல்வார்கள் என குறிப்பிட்டிருந்தார்.

மக்கள் பிரதிநிதியே இல்லாத ரில்வின் சில்வா நிலக்கரி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவின் தீர்ப்பை தற்போது அறிவித்திருக்கிறார். அவரின் இந்த கூற்று குறித்த ஆணைக்குழுவின் சுயாதீன விசாரணைக்கு பாதிப்பு என்பதுடன் ஆணைக்குழுவின் நீதிபதிகளின் சுயாதீனத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதனால் நாங்கள் அந்த ஆணைக்குழுவுக்கு சென்று வாக்குமூலம் வழங்கவதற்கு முன்னர், இந்த ஆணைக்குழுவை அவமதிக்கும் வகையில் செயற்பட்ட ரில்வின் சில்வாவை அழைத்து விசாரணை செய்து அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க வேண்டும்.

அத்துடன் மின்சார கட்டணத்தை மூன்றில் ஒரு வீதம் குறைப்பதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் தற்போதுவரை நூற்றுக்கு 54 வீதம் மின் கட்டணத்தை அதிகரித்திருக்கிறது என குற்றம்சாட்டினார்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button