இலங்கை

கபில சந்திரசேனவின் ஐபோனைத் திறக்க முடியாமல் திணறும் அதிகாரிகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான விசாரணகைளில் அவரது ஐபோனைத் திறப்பதற்கு முடியாதிருப்பதாக நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான மரண விசாரணை இன்று கொழும்பு கோட்டை நீதவான் பசான் அமரசேன முன்னிலையில் நடைபெற்றது.

விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் சமர்ப்பித்த தகவல்களின்படி, உயிரிழந்த கபில சந்திரசேனவின் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) அலைபேசியைத் திறப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அந்த அலைபேசி உயர்தர பாதுகாப்பு வசதிகளைக் கொண்டது, ஃபேஸ் ஐடி (Facial Recognition) மூலம் அது பாதுகாக்கப்பட்டுள்ளது.

கபில உயிரிழந்த பின்னர், அவரது முகத்தைப் பயன்படுத்தி அலைபேசியைத் திறக்க அதிகாரிகள் முயற்சி செய்துள்ளனர்.

ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்தது. இதனால், அலைபேசியைத் தயாரித்த ஆப்பிள் நிறுவனத்திற்கோ அல்லது பொருத்தமான தொழில்நுட்ப நிறுவனத்திற்கோ அனுப்பி அதைத் திறக்க அனுமதி வழங்குமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரியுள்ளனர்.

இந்த விசாரணையில் முதல் சாட்சியான பிரியங்கி அனுஷ்கா விஜேநாயக்க மற்றும் மூன்றாவது சாட்சியான முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் அரவிந்த டி சில்வா ஆகியோர் முன்னிலையாகி சாட்சியமளித்தனர்.

சம்பவம் நடந்த இடத்தில் காகிதத்தில் சுற்றப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத இரண்டு மருந்துகள் மற்றும் இரத்த மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக அரசாங்க ரசாயன பகுப்பாய்வாளரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

மேலும், உயிரிழந்தவர் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஒரு பெல்ட்டும் சான்றுப் பொருளாக நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை தற்போது கொள்ளுப்பிட்டி காவல்துறையினரிடமிருந்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் (CCD) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குற்றத்தடுப்புப் பிரிவினர் மரண பரிசோதனை தொடர்பான இரண்டு தொகுதி அறிக்கைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் இன்னும் எட்டு சாட்சிகளிடம் வாக்குமூலம் பெற வேண்டியுள்ள நிலையில், அடுத்தகட்ட விசாரணை வரும் எதிர்வரும் 14ம் திகதி நடைபெறும் என நீதவான் அறிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button