பிரிட்டன் அரசியல் மாற்றம் ; ஸ்டார்மர் பதவி விலக மாட்டேன் என உறுதி

லண்டன் உள்ளூராட்சி தேர்தல்களில் லேபர் கட்சி கடுமையான பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், பிரதமர் கீர் ஸ்டார்மர் பதவி விலக மாட்டேன் என்று உறுதியாக தெரிவித்துள்ளார். இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் வெளியான தேர்தல் முடிவுகள் லேபர் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இதையடுத்து சில லேபர் எம்.பிக்கள், ஸ்டார்மர் தனது பதவி விலகலுக்கான காலக்கெடுவை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், தனது அமைச்சரவை சகாக்கள் ஆதரவு அளித்து வருவதாகவும், “நான் பதவி விலகி நாட்டை குழப்பத்தில் தள்ள மாட்டேன்” என்றும் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். வேல்ஸில் கடந்த 27 ஆண்டுகளாக நீடித்த லேபர் கட்சியின் ஆட்சி இந்த தேர்தலுடன் முடிவுக்கு வந்துள்ளது.
அதேவேளை, ஸ்கொட்லாந்தில் ஸ்கொடிஷ் நேஷனல் பார்ட்டி (SNP) மீண்டும் மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கும் சூழல் காணப்படுகிறது. இங்கிலாந்தில் ரீஃபார்ம் யூகே கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
அந்தக் கட்சி 1,400-க்கும் அதிகமான உள்ளூராட்சி ஆசனங்களை கைப்பற்றி, பாரம்பரியமாக லேபர் மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சிகள் ஆதிக்கம் செலுத்திய பகுதிகளிலும் ஆட்சியை பிடித்துள்ளது.
பிபிசி வெளியிட்ட தேசிய வாக்கு பங்கீட்டு கணிப்பின் அடிப்படையில், ரீஃபார்ம் யூகே 26 சதவீத வாக்குகளுடன் முதலிடத்தில் உள்ளது.
கிரீன் கட்சி 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், லேபர் மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சிகள் தலா 17 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளன.
இந்த முடிவுகள், பிரித்தானிய அரசியலில் நீண்டகாலமாக நிலவிய இரு கட்சி ஆதிக்கம் முடிவுக்கு வருவதை சுட்டிக்காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், லேபர் கட்சி வடக்கு இங்கிலாந்து மற்றும் மிட்லாண்ட்ஸ் உள்ளிட்ட தனது பாரம்பரிய கோட்டைகளில் 1,100-க்கும் அதிகமான உள்ளூராட்சி இடங்களை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
![]()