இலங்கை

13 ஐயும் ‘ஏக்கிய ராஜ்’யவையும் தமிழினம் முற்றாக நிராகரிக்கிறது; தமிழ்த் தேசிய பேரவை தெரிவிப்பு 

தமிழர் தேசமானது தனது அடிப்படையான அரசியல் உரிமைகளில் உறுதியாக நின்று, சிங்கள பௌத்த பேரினாவத ஒடுக்குமுறைக்கு அடிபணியாது, அதனை எதிர்த்துநின்று, தமிழ்த் தேச அங்கீகாரத்திற்காகச் சனநாயக ரீதியாகத் தொடர்ந்து போராடும் என தமிழ்த் தேசிய பேரவை அறிவித்துள்ளது.

தமிழ்த் தேசியப் பேரவையின் மேதின நிகழ்வு வெள்ளிக்கிழமை நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் நடைபெற்றபோது தருமலிங்கம் சுரேஸால் வாசிக்கப்பட்ட மேதின செய்தியின் போதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது;

இலங்கைத்தீவின் ஆட்சியதிகாரமானது சிங்கள பௌத்த பேரினவாதிகளது கைகளுக்குச் சென்றதிலிருந்து அவ் அதிகாரத்தினைப் பயன்படுத்தி, தமிழர் தேசத்திற்கு எதிராகத் தீவிரப்படுத்தப்பட்ட திட்டமிட்ட இனவழிப்பானது 77 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கின்றது. தமிழர் தேசத்தின் இருப்பை இனவழிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான தமிழ் மக்களது உரிமைக்கான ஆயுதப் போராட்டம் சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியாளர்களால் இனவழிப்பு யுத்தம் மூலம் மௌனிக்கச் செய்யப்பட்டது. ஆனாலும் தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை விட்டுக்கொடுக்காது தொடர்ந்தும் உறுதியாகப் போராடி வருகின்றார்கள்.

தமிழ்த்தேச மக்கள் ஒற்றையாட்சியை நிராகரித்து, தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்கின்ற ஓர் தீர்வை 77 வருடங்களுக்கு மேலாக வலியுறுத்தி வந்திருக்கின்ற நிலையிலே, 2009 இல் இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட பின்னரும்கூட, ஒற்றையாட்சியை நிராகரித்தும், தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தைக் கோரியுமே ஒவ்வொரு தேர்தல்களுடாகவும் தங்களது ஏகோபித்த ஆணையை வழங்கி வந்திருக்கிறார்கள்.

அவ்வாறு தமிழ் மக்களின் ஏகோபித்த ஆணையை பெற்றிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பானது,

2015 – 2019 வரையான காலப்பகுதியில் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ரணில் – மைத்திரி அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் தயாரிக்கப்பட்ட ‘ஏக்கிய ராஜ்ய’ வரைபுக்கு முழுமையான பங்களிப்பை வழங்கியிருந்த நிலையில், தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளுக்கு முற்றிலும் நேரெதிரான அந்த வரைபையே தாமும் இறுதிப்படுத்தி நிறைவேற்றப்போவதாக தற்போதய அனுரகுமார திசாநாயக்க அரசாங்கமும் அறிவித்து, அந்த அரசியல் யாப்பு வரைபினைக் கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கான செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், சிங்கள தேசத்திற்கும், இலங்கைத் தீவின் மீது கரிசனை கொண்டிருக்கும் சர்வதேச சக்திகளுக்கும் 2026 மே தினத்தில் தமிழ்த் தேசிய பேரவையானது கீழ்வரும் நிலைப்பாடுகளை வலியுறுத்துகின்றது.

தமிழர் தேசமானது தனது அடிப்படையான அரசியல் உரிமைகளில் உறுதியாக நின்று, சிங்கள பௌத்த பேரினாவத ஒடுக்குமுறைக்கு அடிபணியாது, அதனை எதிர்த்துநின்று, தமிழ்த் தேச அங்கீகாரத்திற்காகச் சனநாயக ரீதியாகத் தொடர்ந்து போராடும்.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்னும் பெயரில் புதிய அரசியல் யாப்பாகக் கொண்டுவரப்படவுள்ள ‘ஏக்கிய ராஜ்ய’ வரைபானது ஏற்கனவே தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட 13 ஆம் திருத்தச் சட்டத்தினை விடவும் மிகவும் பலவீனமானது என்பதனைச் சுட்டிக்காட்டுகின்றது.

எனவே, ‘ஏக்கிய ராஜ்ய’ அரசியல் யாப்பினை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்ற முயல்வதனை வடக்கு கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் மக்களும் தடுத்து நிறுத்த முன்வர வேண்டும்.

நாட்டைப் பிரிப்பதைத் தவிர வேறொரு தீர்;வுக்கும் விடுதலைப்புலிகள் தயாராக இல்லை என்ற உண்மைக்கு புறம்பான நிலைப்பாட்டை சுட்டிக்காட்டி, இனப்பிரச்சினைத் தீர்வுக்கு விடுதலைப் புலிகளே தடையாக உள்ளனர் என்று கூறி, சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்த தமிழினவழிப்பு போருக்கு சர்வதேசமும் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியிருந்தது. போருக்கு பின்னரான சூழலில் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் தமிழ் தேச அங்கீகாரத்தையும், தனித்துவமான இறைமையையையும் சுயநிர்ணய உரிமையையும் வலியுத்திய சமஸ்டி தீர்;வுக்கு ஆணை வழங்கிவந்துள்ள நிலையில், தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை எட்டுவதற்கு சிறிலங்கா அரசு மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் பாரிய பொறுப்பும்; சர்வதேசத்துக்கு உள்ளது. அதேவேளை, இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்கள் போன்றே இந்த ஜே.வி.பி. அரசாங்கமும் தமிழ் மக்கள் வழங்கி வந்த ஆணைக்கு மாறாக, ‘ஏக்கிய ராஜ்ய’ (ஒற்றையாட்சி) அரசியலமைப்பை தமிழ் மக்கள் மீது புதிதாக திணிக்க எடுக்கும் முயற்சியையும் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பும் தமிழின அழிப்பு போருக்கு ஒத்துழைப்பு வழங்கிய இதே சர்வதேச சமூகத்துக்கு உள்ளது.

தமிழ் மக்கள் – காலம் காலமாக வழங்கிவரும் தமிழ்த் தேச அங்கீகாரத்துக்குரிய ஆணையை மீறி, ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13 ஆம் திருத்தத்தையோ அல்லது ஒற்றையாட்சிக்குட்பட்ட வேறு எந்தவொரு தீர்வையோ தமிழினம் நிராகரிக்கிறது.

தமிழ்மக்கள் மீதான இனப்படுகொலைக்கு உள்ளக விசாரணை மூலம் ஒருபோதும் நீதி கிடைக்காது என்பதுடன் அதற்காக சர்வதேச குற்றவியல் விசாரணை நடத்தப்படவேண்டும்.

இனவழிப்பு யுத்தத்தால் அழிக்கப்பட்ட வடக்கு கிழக்கு ஈழத் தமிழ்த் தேசத்தை, போரால் பாதிக்கப்பட்ட பிராந்தியமாக பிரகடனம் செய்து, அத்தேசத்தின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான விசேட நிதியேற்பாடுகள் செய்யப்படவேண்டும். அத்துடன் குறித்த செயற்திட்டத்தில் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், முன்னாள் போராளிகள், பெண்தலைமைத்துவக் குடும்பங்கள், பெற்றோரை இழந்த பிள்ளைகள் போன்றோர் உள்வாங்கப்பட்டு அவர்களின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

பயங்கரவாத தடைச் சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டும் என்பதுடன் அதற்குப் பதிலாக அரசால் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தையோ அல்லது அதனையொத்த எந்தவொரு சட்டத்தையோ முற்றாக எதிர்க்கின்றோம்.

அனைத்து அரசியல் கைதிகளும் நிபந்தனையின்றி விடுவிக்கப்படல் வேண்டும்.

ஊடக சுதந்திரத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் நசுக்கும் நோக்கில் நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச்சட்டம் நீக்கப்படல் வேண்டும்.

சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் நிறுத்தப்படல் வேண்டும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச நீதி நிலைநாட்டப்படல் வேண்டும்.

தமிழ்த் தேசத்தின் விவசாயிகள், மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்;பட்டு. அவர்களுக்குரித்தான நிவாரணங்கள் வழங்கப்படல் வேண்டும்.

நூற்றாண்டுகளாக மறுக்கப்பட்டுவரும் மலையக தமிழ் மக்களது காணி உரிமைகள் உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் வழங்கப்படல் வேண்டும்.

தென்னிலங்கை மற்றும் இந்திய மீனவர்களது அத்துமீறிய மீன்பிடிச் செயற்பாடுகள் தடுக்கப்படுவதுடன், கடற்தொழிலாளர்கள்; தமது கடற்தொழிலை தத்தமக்குரிய கடற்பரப்பில் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு அனுமதியளிக்கப்படவேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கான உதவிகளும் மேற்கொள்ளப்படவேண்டும்.

அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தின் அதிகாரங்களைப் பறிப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் உடன் நிறுத்தப்படல் வேண்டும், என்பதுடன் அந்த அலுவலகத்திற்கு கணக்காளர் ஒருவர் உடனடியாக நியமிக்கப்படல் வேண்டும்.

தொல்லியல் மற்றும் பௌத்த அடையாளங்கள் என்ற போர்வையில் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்படுவதும், சிங்கள பௌத்த மயமாக்கப்படுவதும் உடன் நிறுத்தப்படல் வேண்டும். (தொப்பிகல, கெவுளியாமடு, பச்சைக்கொடிசுவாமிமலை, தாந்தாமலை, திரியாய், குருந்தூர்மலை, வெடுக்குநாறிமலை, தையிட்டி)

தமிழர் தேசத்தை கபளீகரம் செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்படும் கிவுல் ஓயாதிட்டம், கீழ் மல்வத்துஓயா திட்டம், மகாவலி அபிவிருத்தி திட்டம் உள்ளிட்ட இனவாத நோக்கிலான திட்டங்கள் உடன் நிறுத்தப்படவேண்டும்.

மட்டக்களப்பில் தமிழ்ப் பண்ணையாளர்களது மேய்ச்சல் நிலங்களான மயிலத்தமடு மாதவனையில் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்கில் குடியேற்றப்பட்ட பெரும்பான்மை இனத்தவர்கள் வெளியேற்றப்பட்டு மேய்ச்சல் தரைகள் விடுவிக்கப்படவேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button