இலங்கை

ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணியில் ஐ.தே.க கலந்துகொள்ளாது

ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எந்தவொரு கட்சியினதும் மே தினப் பேரணிகளில் ஐக்கிய தேசியக் கட்சி கலந்துகொள்ளாது என அந்தப் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

தமது மே தினப் பேரணியில் கலந்துகொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தி விடுத்த அழைப்புக்குப் பதிலளிக்கும் வகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துகோரல அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருட மே முதலாம் திகதி பௌர்ணமி தினத்தில் அமைந்துள்ளதால், அன்றைய தினம் அரசியல் பேரணிகள் அல்லது ஏனைய அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் அதனை மத வழிபாடுகளுக்காக ஒதுக்க ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே தீர்மானித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ பிரதமராக இருந்த காலத்தில், மே முதலாம் திகதி பௌர்ணமி தினமாக அமைந்தால் அன்று அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது பொருத்தமற்றது என்று சுட்டிக்காட்டியிருந்தமையை தலதா அத்துகோரல தனது கடிதத்தில் நினைவூட்டியுள்ளார். அதன் அடிப்படையிலேயே இம்முறை இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே நாட்டு மக்களின் பலரினதும் எதிர்பார்ப்பாக உள்ளது. அந்த மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றத் தாம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் இணைந்து செயற்பட ஐக்கிய தேசியக் கட்சி தயாராக இருப்பதாகவும் அக்கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *