இலங்கை

25 லட்சம் டொலர் மோசடி சைபர் தாக்குதல் அல்ல; போலி ஆவணங்கள் மூலம் நடந்தது 

அரசாங்கக் கணக்குடன் தொடர்புடைய அண்மைய 25 லட்சம் டொலர் மோசடி நிதி மோசடியானது உண்மையான சைபர் தாக்குதல் அல்ல என்றும், அது போலியான ஆவணங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஒன்று என்றும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, குற்றம் சுமத்தியுள்ளார்.

தங்காலையில் ஊடகவியலாளர்களிடம் பேசிய நாமல், இதற்குப் பொறுப்பான நபர் முன்கூட்டியே அதிகாரிகளைத் தொடர்பு கொண்டதாகக் குறிப்பிட்டார். கணினி ஊடுருவல்காரர் அதிகாரிகளை அழைத்து, ‘நான் இப்போது உங்கள் கணக்கை ஹேக் செய்யப் போகிறேன், தயவுசெய்து இந்தக் கடிதங்களில் கையெழுத்திட்டு அனுப்புங்கள்’ என்று கூறியுள்ளார்,” எனத் தெரிவித்த அவர், திருட்டுக்கு உடந்தையாக இருப்பதற்காக கையெழுத்துக்கள் போலியாக இடப்பட்டதாகவும் கூறினார்.

இது ஒரு அதிநவீன ஹேக்கிங் சம்பவம் என்ற கூற்றை நிராகரித்த அவர், இச்சம்பவத்தை ஒரு “வெளிப்படையான மோசடி” என்று விவரித்ததுடன், அரசாங்கம் பொதுமக்களை திசைதிருப்ப முயற்சிப்பதாகவும் குற்றம் சுமத்தினார். நிதி அமைச்சு உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும், தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் நாமல் மேலும் வலியுறுத்தினார்.

சந்தேக நபர் பல மாதங்களாக விசாரணையில் இருந்து தப்பித்து வருவதாகக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ச, சட்ட நடவடிக்கை எடுப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்தும் கேள்வி எழுப்பினார். போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாவிட்டால், வெளிநாட்டுப் பணப்பரிமாற்றங்கள் மற்றும் உதவிப் பங்களிப்புகள் உள்ளிட்ட பொது நிதிகள் அபாயத்திற்குள்ளாகும் என்று அவர் எச்சரித்தார்.

அரசாங்கத்திற்கு எதிராக ஊழல் மற்றும் முறையற்ற நிர்வாகம் தொடர்பான விரிவான குற்றச்சாட்டுகளை முன்வைத்த நாமல், கொள்முதல் செயல்முறைகள் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகளில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறினார். அத்துடன், இதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராகத் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தவறிவிட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

அரச நிதியை முகாமைத்துவம் செய்வதில் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்த பொதுமக்களின் கவலைகளுக்கு மத்தியில் இவரது இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *