முச்சந்தி

துறவற ஆடையைப் போர்வையாகக் கொண்டு போதைப்பொருள் கடத்தல்: மகாநாயக்க தேரர்கள் அதிரடி நடவடிக்கை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 110 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்களுடன் 22 இளம் பிக்குகள் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில், இலங்கையின் மகாநாயக்க தேரர்கள் தமது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து மகாநாயக்க தேரர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“துறவற ஆடையைத் தரித்துக் கொண்டு, சட்டவிரோதமான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவது என்பது புத்த சாசனத்துக்கு எதிரானது மாத்திரமன்றி, பாரிய சட்டவிரோதச் செயலுமாகும். புனிதமான காவி உடையைத் தவறாகப் பயன்படுத்தும் இவ்வாறான நபர்களின் செயற்பாடுகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை.

பிக்குகள் என்ற போர்வையில் இவ்வாறான சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும். விசாரணைகளின் அடிப்படையில், இக்குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் பௌத்த மத பீடங்களிலிருந்து நீக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” – என்று மகாநாயக்க தேரர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

“இளம் பிக்குகளை இவ்வாறான சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுத்தத் தூண்டுபவர்கள் மற்றும் இக்கடத்தல்களுக்குப் பின்னால் இருந்து செயற்படும் சூத்திரதாரிகள் குறித்துப் பாதுகாப்புத் தரப்பினர் பாரபட்சமற்ற விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். இதில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கும் எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” – என்றும் மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *