இலங்கை

நாட்டுக்குள் பாரிய வலுசக்தி பிரச்சினை தலைதூக்கும்!; சம்பிக்க எச்சரிக்கை

நிலக்கரி பிரச்சினையால் ஏற்பட்டுள்ள மின்சார பிரச்சினை, டீசல் பிரச்சினை காரணமாக நாட்டின் வலுசக்தி துறை வீழ்ச்சியடைந்துள்ளது. அதனால் வலுசக்தியை கட்டியெழுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், நிச்சயமாக எதிர்வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதமாகும்போது நாட்டுக்குள் பாரிய வலுசக்தி பிரச்சினை தலைதூக்குமென முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் நேற்று கூட்டு எதிர்க்கட்சி நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

ஏப்ரல் 20 ஆம் திகதியாகும்போது நாட்டுக்கு 25 நிலக்கரி கப்பல்களை கொண்டுவர ட்ரைடன் செம்பா நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது. தற்போது அந்த காலம் முடிவடைந்துள்ளது. இதுவரை 15 நிலக்கரி கப்பல்களே நாட்டுக்கு வந்திருக்கின்றன. அதனையும் இறக்குவதில் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. அதனால் 25 நிலக்கரி கப்பல்களையும் கொண்டுவரும் சவாலை வெற்றிகொள்ள முடியாமல் போயிருக்கிறது.

நிலக்கரி பிரச்சினையால் ஏற்பட்டுள்ள மின்சார பிரச்சினை, டீசல் பிரச்சினை காரணமாக நாட்டின் வலுசக்தி துறை வீழ்ச்சியடைந்து செல்வதால் நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் அரசாங்கம் தற்போது 2009இல் இருந்து இடம்பெற்ற நிலக்கரி கொள்வனவு தொடர்பில் தேடிப்பார்க்க நடவடிக்கை எடுத்திருக்கிறது.

அதனால் தற்போது உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் வலுசக்தியை கட்டியெழுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், நிச்சயமாக எதிர்வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதமாகும்போது நாட்டுக்குள் பாரிய வலுசக்தி பிரச்சினை தலைதூக்கும். என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *