உலகம்

நியூயார்க்கில் நூலிழையில் தவிர்க்கப்பட்ட விமான விபத்து

நியூயார்க்கின் ஜான் எஃப். கென்னடி (JFK) சர்வதேச விமான நிலையத்தில், அமெரிக்கன் ஏர்லைன்ஸின் ரிபப்ளிக் ஏர்வேஸ் விமானமும், ஏர் கனடாவின் ஜேஸ் ஏவியேஷன் விமானமும் வானில் மிக நெருக்கமாக வந்ததாகவும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

திங்கள்கிழமை மதியம் 2:35 மணியளவில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க விமானசேவை நிர்வாக நிறுவனம் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இண்டியானாபோலிஸில் இருந்து வந்த அமெரிக்க விமானம், தரையிறங்க வேண்டிய பாதையைத் தவறி, பக்கவாட்டு ஓடுதளத்தில் தரையிறங்கத் தயாராக இருந்த ஏர் கனடா விமானத்திற்கு மிக அருகில் சென்றது.

ஒரு கட்டத்தில் இவ்விரு விமானங்களுக்கும் இடையே செங்குத்தாக வெறும் 106.68 மீட்டர் இடைவெளி மட்டுமே இருந்தது.

இரு விமானங்களிலும் இருந்த எச்சரிக்கை கருவிகள் ஒலியெழுப்பியதால் விமானிகள் உடனடியாகச் சுதாரித்துக் கொண்டனர்.

விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், மோதல் அபாயத்தை உணர்ந்து உடனடியாக இரு விமானிகளுக்கும் அவசர உத்தரவுகளை வழங்கினர். ஏர் கனடா விமானத்தை உயரத்திற்குப் பறக்கும்படியும், அமெரிக்க விமானத்தை அதே உயரத்தில் நீடிக்கும்படியும் அவர்கள் அறிவுறுத்தினர்.

அந்தச் சமயத்தில் கட்டுப்பாட்டு அறையில் அபாய ஒலிகள் (Alarms) கேட்டது அங்கிருந்த ஆடியோ பதிவுகள் மூலம் உறுதியானது.

இரு விமானங்களும் உடனடியாகத் தரையிறங்கும் முயற்சியைக் கைவிட்டு (Go-around), மீண்டும் வானில் சுற்றிச் சென்று பின்னர் பாதுகாப்பாகத் தரையிறங்கின.

“பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து எங்கள் விமானிகள் மிகச் சரியாகச் செயல்பட்டனர்” என்று விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்புதான் லாகார்டியா விமான நிலையத்தில் நடந்த விபத்தில் இரண்டு விமானிகள் உயிரிழந்த நிலையில், தற்போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *