இலங்கை

கோட்டாபய – சுரேஷ் சலே ஆகியோரால் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்!

மகிந்த ராஜபக்சவை 2015 ஆம் ஆண்டு மீண்டும் ஜனாதிபதியாக்கிய அப்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுரேஷ் சலே ஆகியோர் இணைந்து அநியாயமாக மூன்று தமிழ் இளைஞர்கள், ஒரு இராணுவ வீரரை கொலை செய்த அட்டூழியங்கள் தொடர்பில் சர்வதேச சிங்கள இணைய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு சுரேஷ் சலே மற்றும் கோட்டாபய செய்த சூழ்ச்சிகளை விரிவாக ஆதாரங்களுடன் விவரித்துள்ள விதம்,

இறுதி யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கையில் ஆயுதம் ஏந்திய போராட்டம் மௌனிக்கப்பட்டு ஐந்து வருடங்கள் கடந்திருந்த நிலையில் இலங்கையில் அமைதி சூழல் ஏற்பட்டிருந்தது.

அவ்வாறான ஒரு சூழலில் பாதுகாப்பு அமைச்சினால் தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டெழ ஆரம்பித்து விட்டதாகவும் அவர்கள் ஆயுமேந்தி போராட தயாராவதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கு பின்னர் இரண்டாவது தலைவராக கற்பன் செல்லையா பொன்னையா அல்லது கோபி என்பவர் செயற்பாட்டில் இறங்கியுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது.

மேலும் அக் குழுவினர் தொடர்பில் தகவல் தருபவருக்கு 10 இலட்சம் பணம் வழங்குவதாகவும் அறிவித்திருந்தது.

அக்காலப்பகுதியில் பிரபல ஆங்கில பத்திரிகையான டெய்லிமிரர் பத்திரிகையில் டி.பி.எஸ்.ஜெயராஜ் என்ற தமிழ் ஊடகவியலாளர் கோட்டாபய மற்றும் மகிந்தவை கோபியின் குழுவும் கொலைச் செய்ய திட்டம் தீட்டியுள்ளதாக ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது.

மூவரும் சுட்டுக் கொல்லப்பட்ட விதம்
டி.பி.எஸ்.ஜெயராஜ் மகிந்த ராஜபக்சக்களை திருப்திபடுத்துவதற்காக கட்டுரைகளை எழுதி வந்தவராவார். அவ்வாறான நிலையில் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய விசேட செய்தியாளர் மாநாட்டில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

வெளிஓயா பகுதியிலுள்ள கம்பிலிவெவ என்ற காட்டுப்பகுதியில் இராணுவத்தினர் நடத்திய தேடுதலில் கோபி குழுவினர் மற்றும் இராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் கோபி உள்ளிட்ட இருவர் கொல்லப்பட்டதாகவும் இராணுவ வீரர் ஒருவரும் கொல்லப்பட்டதாக அறிவித்தார்.

இந்த செய்தி அன்று சர்வதேச ஊடகங்களும் வெளியிடப்பட்டிருந்தது. குறித்த தாக்குதலில் கற்பன் செல்லையா பொன்னையா அல்லது கோபி –சுந்தரலிங்கம் கற்பன் தெவியன் -நவரத்தினம் நவதீதன் அப்பன் ஆகியோரே கொல்லப்பட்டனர்.

இவ்விடயம் தொடர்பில் கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவின் பிரதானியான நாலக்க சில்வா இரகசிய விசாரணைகளை நடத்திருந்தார்.

குறித்த விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு பிரிவின் அம்பாறைக்கு பொறுப்பான அதிகாரி நடத்திய பூரண விசாரணையில் இந்த மூவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீள வளர்வதற்கு எவ்வித சம்பந்தமும் இல்லையென தெரிவித்திருந்தது.

கோட்டாபய – சுரேஷ் சலே ஆகியோரின் கூட்டணியே கோபிக்கு விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என்ற நாமத்தை விதைத்தவர்கள்.

கோபி 32 வயதான சாதாரண லொறி சாரதியாவார். கோபி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து போரின் பின்னர் புனர்வாழ்வு பெற்று சாதாரண மனிதராக வாழ்ந்தவராவார்.

கொல்லப்பட்டவர்கள் மூவரும் கிளிநொச்சியிலுள்ள இராணுவ முகாமில் வேலை செய்துள்ளனர்.

கோபி 2014 ஏப்ரல் 06 ஆம் திகதி இராணுவப் புலனாய்வு பிரிவால் கைது செய்யப்படுவதோடு ஏனைய மூவரும் கைதாகியுள்ளனர்.

கோபி கைது செய்யப்பட்டதை அன்று வடக்கின் கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் உதய பெரேரா சம்பவம் தொடர்பில் அறிவித்துள்ளார்.

குறித்த செய்தி ஏப்ரல் 08 ஆம் திகதி 2014 உதயன் பத்திரிகையிலும் பிரசுரமாகியுள்ளது. அதன் பின்னர் இவர்களை சுரேஷ் சலே 2014 ஏப்ரல் 10 ஆம் திகதி இரகசியமாக புளியங்குளம் முகாமுக்கு மாற்றியுள்ளார்.

அதன் பின்னர் 2014 ஏப்ரல் 11 ஆம் திகதி சுரேஷ் சலேவின் வேண்டுதலின் பேரில் அன்றிரவு வெளிஓயா கம்பிலிவெவ காட்டுப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த திட்டத்திற்கு அடிமட்ட உதவிகளை இராணுவ புலனாய்வு பிரிவில் கடமையாற்றிய லான்ஸ் கோப்ரல் செல்வராஜன் கமலநாதன் எஸ்.கே என அழைக்கப்படும் அதிகாரியே வழங்கியுள்ளார்.

இவர் குருநாகலையைச் சேர்ந்தவர். இருரையும் அன்று அந்த காட்டில் சுட்டு கொன்றுள்ளனர். ஏனென்றால் இந்த திட்டத்தில் அனைத்தும் விடயங்களும் அறிந்திருந்ததால் இவரும் அந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக மேற்குறிப்பிட்ட கதையை தயாரித்து வெளியிட்டுள்ளனர்.

2015 ஜனாதிபதி தேர்லில் மீண்டும் மகிந்தவுக்கு ஆட்சியை வழங்க வேண்டும்.இல்லாவிட்டால் விடுதலைப் புலிகள் நாட்டை கைப்பற்றி விடுவர் என்ற சிந்தனையை விதைப்பதற்கே இவ்வாறான ஒரு அநியாயத்தை செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *