இலங்கை

வவுனியாவில் இளைஞன் மீது தாக்குதல் நடத்தி பொலிஸார் அட்டகாசம் – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

சித்திரைப் புத்தாண்டு தினமான நேற்று இரவு வவுனியா மாநகரசபை மைதானத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது, பொலிஸார் இளைஞர் ஒருவரை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா மாநகரசபை மைதானத்தில் நேற்று இரவு பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன் இசை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது இசை நிகழ்ச்சியின் நுழைவாயில் பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கும், அங்கு வந்த இளைஞர்களுக்கிடையே திடீரென வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

தர்க்கம் முற்றிய நிலையில், அங்கிருந்த பொலிஸார் ஓர் இளைஞனைத் தமது கால்களாலும் பாதுகாப்பு அங்கிகளாலும் தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான இளைஞனை பொலிஸார் பலவந்தமாகப் பொலிஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். எனினும், சிறிது நேரத்தின் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொலிஸார், மக்கள் முன்னிலையிலேயே ஒரு இளைஞன் மீது இவ்வாறான வன்முறையைப் பிரயோகித்தது அங்கிருந்தோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ஒரு நபர் தவறு செய்திருப்பின் அவரைச் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிக்கும் அதிகாரமே பொலிஸாருக்கு உண்டு. வீதியில் வைத்துத் தண்டனை வழங்கும் (Street Justice) அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்படவில்லை.

வவுனியாவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் பொலிஸ் துறையினரின் அடாவடித்தனத்தைக் காட்டுவதுடன், சட்ட ஒழுங்கை நிலைநாட்ட வேண்டியவர்களே சட்டத்தைக் கையில் எடுப்பது ஜனநாயகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாகும். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு நீதி கிடைக்குமா என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *