இலங்கை

இளைஞனை கால்களால் எட்டி உதைத்து பொலிஸார் கொடூர தாக்குதல்; வவுனியா இசை நிகழ்ச்சியில் பயங்கரம்

வவுனியா நகரில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது, இளைஞர் ஒருவரை பொலிஸார் மிக மோசமான முறையில் தாக்கியமைக்கு இலங்கை தமிழரசு கட்சியின் செட்டிகுளம் பிரதேச கிளைத் தலைவரும் வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபை உப தவிசாளருமாகிய சிவானந்தராசா தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

வவுனியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது, இலங்கை பொலிஸார் ஒரு இளைஞரை கால்களால் எட்டி உதைத்தும், பாதுகாப்பு அங்கிகளைப் பயன்படுத்தியும் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியுள்ளனர்.

இச்செயற்பாடு இலங்கையின் அரசியலமைப்பு உறுப்புரை 11 னை அப்பட்டமாக மீறும் செயலாகும். எவரும் சித்திரவதைக்கு அல்லது கீழ்த்தரமான நடாத்துகைக்கு உட்படுத்தப்படலாகாது என்ற அடிப்படை உரிமையை பொலிஸார் இங்கே மீறியுள்ளனர்.

ஒருவர் குற்றம் செய்திருப்பின் அவரை நீதிமன்றத்தில் முன்னிறுத்துவதே சட்ட நடைமுறை. அதைவிடுத்து, வீதியில் வைத்து தண்டனை வழங்குவதற்கு பொலிஸாருக்கு எவ்வித சட்ட உரிமையும் இல்லை. ஒருவரைக் கைது செய்யும் போது கூட குறைந்தபட்ச பலத்தையே பயன்படுத்த வேண்டும் என்பது விதியாகும். ஆனால், இங்கு இடம்பெற்றது திட்டமிட்ட வன்முறையாகவே தெரிகிறது, என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களின் பாதுகாப்பிற்காக இருக்க வேண்டிய பொலிஸார், மக்களை அச்சுறுத்தும் வன்முறையாளர்களாக மாறுவது சட்டத்தின் ஆட்சியை கேள்விக்குறியாக்குகிறது.

எனவே இத்தாக்குதலில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள் உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும். அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட இளைஞருக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *