ஈரான் மீதான போரை உடனே நிறுத்தக் கோரி யாழில் அமெரிக்காவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

அமெரிக்க ஏகாதிபத்தியப் போர் வெறியை எதிர்ப்போம்! ஈரான் மக்களின் போராட்டத்தை ஆதரிப்போம்!! எனும் பிரதான தொனிப் பொருளில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை (10) முற்பகல்-10 மணி முதல் முற்பகல்-11 மணி வரை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய ஜனநாயக மாக்சிச மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளரும்,மூத்த பொதுவுடைமைவாதியுமான சி.கா.செந்திவேல், கட்சியின் வடபிராந்தியச் செயலாளர் கா.செல்வம் கதிர்காமநாதன், முன்னிலை சோசலிசக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் விமல் பியதிஸ்ஸ, மூத்த எழுத்தாளர் க. தணிகாசலம், புதிய ஜனநாயக மாக்சிச லெனினினிசக் கட்சி, முன்னிலை சோசலிசக் கட்சி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் சிவில்- சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேற்படி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் ஈரான் மீதான போரை உடனே நிறுத்து!, யாரிங்கே பயங்கரவாதி… டொனால்ட் ட்ரம்பே பயங்கரவாதி!, அன்று வியட்நாம்… நேற்று வெனிசுவேலா… இன்று ஈரான்… நாளை யாரோ…?, யுத்தமும், சத்தமும் உனக்கு வேண்டும்! அமைதியும், வாழ்வும் எமக்கு வேண்டும்!!, ஐ.நா சபையே பதில் சொல்!
மெளனமாகவிருப்பது ஏனோ!, ஏகாதிபத்தியத்தை எதிர்ப்போம்! இலங்கையைக் காப்போம்! உள்ளிட்ட பல கோஷங்களை எழுப்பியும், பல்வேறு சுலோகங்கள் எழுதப்பட்ட பதாதைகளைத் தமது கைகளில் ஏந்தியும் கடும் எதிர்ப்பில் ஈடுபட்டனர். அத்துடன் ஈரானுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியப் போரை எதிர்க்கும் வகையிலான துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
![]()