இலங்கை

நான் முட்டாளா? சபையில் அலறிய அர்ச்சுனா!

அநுரகுமார திசாநாயக்கவிற்கு வாக்களிக்குமாறு நான் மக்களிடம் கோரிய போது திட்டித் தீர்த்தார்கள். அன்று புரியவில்லை மக்கள் ஏன் திட்டுகிறார்கள் என்று! ஆனால் இன்று தெளிவாகப் ஏன் என்று புரிகின்றது எனப் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அர்ச்சுனா இராமநாதன் எம்பி இதனைத் தெரிவித்தார்.

அர்ச்சுனா இராமநாதன் தொடர்ந்தும் கருத்துரைக்கையில், “தனக்கு சிங்களம் சரியாகப் புரியாது. எனினும் புரிந்த சிங்களத்தில் தெரிவிக்கின்றேன். அனைவரும் சிங்களத்தில் இப்படியொரு வசனத்தைச் சொல்வார்கள். ‘சிங்களயோ மோடயோ கெவும் கண்ட யோதயோ’ எனத் தெரிவிப்பார்கள். எதற்காகச் சொல்வார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இதற்குப் பொருத்தமாக இருக்குமென்று நினைக்கின்றேன்.

ஜனாதிபதி ஒவ்வொரு முறையும் இந்தப் பாராளுமன்றத்திற்கு வருகை தந்து முழுமையாக எதிர்மறையான கருத்துக்களை இல்லாதொழித்துச் செல்கின்றார். இதற்கான வலியை இப்போது அனுபவிக்க இயலாது. தகரமொன்றிற்கு 10 இலட்சம் தருவதாக அறிவித்தார். பொய் சொல்வதற்கும் வரையறை ஒன்று உள்ளது. ஆகையினால் கூறிய பொய்களுக்கெல்லாம் தனது ஓய்வின் போது வீட்டிற்குச் செல்லும் போதே புரியும். அவருக்கு மீண்டும் வீதியில் இறங்கிச் செல்ல முடியாத நிலை ஏற்படும்.

10 வருடங்களே ஜனாதிபதியாகப் பதவி வகிக்க முடியும். தொடர்ச்சியாக ஜனாதிபதியாக வாழ முடியாது. கௌரவ சபாநாயகர் அவர்களே! கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். தற்போதைய ஜனாதிபதி தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து கொண்டு வீதியில் செல்லும் போது, ‘அந்தப் பொய்க்காரர் செல்கின்றார்’, ‘அந்தப் பொய்க்காரர்தானே செல்கின்றார்’ என்றல்லவா பொதுமக்கள் கதைப்பார்கள். அப்போது எவ்வளவு வலிக்கும் அவருக்கு என்று சிந்தித்துப் பாருங்கள்.

நளிந்த, ஹரினி, சுனில் வட்டகல ஆகியோர் தங்களுடைய மனசாட்சிக்கு அமைவாக கடமையாற்றுகின்றனர். ஒருவர் தவறிழைத்தால் அவரைத் தட்டிக்கேட்கும் கலாசாரத்திலேயே நாங்கள் வளர்ந்துள்ளோம். ஆனால் இங்கு ஒருவர் தவறிழைத்தால் அவரைக் காப்பாற்ற அனைவரும் முயற்சிக்கின்றார்கள். தாம் தவறிழைத்ததாக எவரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் நான் அச்சந்தர்ப்பத்திலேயே பதவியிலிருந்து இடைவிலகிச் சென்று விசாரணைகள் நிறைவடையும் வரை வீட்டிலிருப்பேன்.

ஆனால் குமார ஜயக்கொடிக்கு எதிராக இத்தனை குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தும் விசாரணைக்குச் செல்லாமை ஏன் என்று கேட்க விரும்புகின்றேன். விசாரணையின் இறுதியில் நீங்கள் நிரபராதி என்றால் மீண்டும் அப்பதவியில் கௌரவமாக அமருங்கள். எரிபொருளுக்கு 200 ரூபாய் அதிகரித்த ஜனாதிபதி பின்னர் பாராளுமன்றிற்கு வருகை தந்து மக்களுக்கு நிவாரணம் வழங்கவுள்ளதாகத் தெரிவித்து 20 ரூபாயைக் குறைக்கின்றார். இதனை நம்பி ஏமாறுவதற்கு நான் என்ன முட்டாளா? அல்லது நாட்டு மக்கள் என்ன முட்டாள்களா? அல்லது இதனை அறிவித்தவர் முட்டாளா எனத் தெரியவில்லை.

தற்போது பெட்ரோல் ஒரு லீற்றர் 600 ரூபாவாகும். இதற்கு 20 ரூபாய்தான் நிவாரணம் என்றால் வெட்கப்படுகின்றேன். அநுர அரசாங்கம் இனிமேலும் இலஞ்ச ஊழலைப் பிடிக்கப் போகின்றது, திருடர்களைக் கைது செய்யப் போகின்றது, கொள்ளையிடப்பட்ட சொத்துக்களைக் கொண்டுவரப் போகின்றது என மக்கள் தற்போதும் நம்புவார்களாயின், ‘சிங்களயோ மோடயோ கெவும் கன்ன யோதயோ’ என்ற பழஞ்சொல் உண்மையாகிவிடும்” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *