இலங்கை

புலிகளுக்கே அஞ்சாத புலனாய்வாளர்கள் ஆட்சியாளர்களுக்குப் பணியமாட்டார்கள்- நாமல் முழக்கம்!

“யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளுக்கே அஞ்சாத இலங்கைப் புலனாய்வாளர்கள், தற்போதைய ஆட்சியாளர்களின் அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் அஞ்சமாட்டார்கள்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தொடர்பில் உதய கம்மன்பில வெளியிட்டுள்ள தகவல்கள் குறித்து நாம் ஆராய்ந்து வருகின்றோம். எனினும், தற்போதைய ஆளுங்கட்சியினர் விசாரணைகளைத் திட்டமிட்டபடி வேறு திசைக்குக் கொண்டுசெல்ல முயற்சிக்கின்றனர். அதிகாரத்தைப் பயன்படுத்தி அச்சுறுத்தல் விடுத்து, பலவந்தமாக வாக்குமூலங்களைப் பெறும் சூழல் இன்று காணப்படுகின்றது.

முறையற்ற விதத்தில் சாட்சியங்களைத் திரட்டுவதன் மூலம் நாட்டின் புலனாய்வுப் பிரிவைப் பலவீனப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது. எமது புலனாய்வுப் பிரிவினர் நாட்டுக்காக முன்னின்று செயற்பட்டவர்கள். அவர்கள் யுத்த காலத்தில் எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டவர்கள். எனவே, தற்போதைய ஆட்சியாளர்களின் மிரட்டல்களுக்கு அவர்கள் பணியப்போவதில்லை.

புலனாய்வுப் பிரிவினரைப் பழிவாங்கும் படலத்தை அரசு நிறுத்த வேண்டும். எதிர்காலத்தில் எமது ஆட்சி அமையும் போது, பாதிக்கப்பட்ட அனைத்துப் புலனாய்வு அதிகாரிகளுக்கும் நாம் நிச்சயம் நீதியைப் பெற்றுக்கொடுப்போம்.”என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *