தையிட்டி விகாரைக்கு எதிராக மீண்டும் தொடர் போராட்டம்

யாழ் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரியும், திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் கையளிக்குமாறு வலியுறுத்தியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பாதிக்கப்பட்ட பொதுமக்களுடன் இணைந்து மாதாமாதம் முன்னெடுக்கும் தொடர் போராட்டம் பெளர்ணமி தினமான நேற்றுப் புதன்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.
நேற்றைய போராட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சாரச் செயலாளர் நடராஜர் காண்டீபன், வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
பெளர்ணமி தினமான நேற்றைய தினம் மாலை தையிட்டி திஸ்ஸ விகாரையில் விசேட வழிபாடுகள் இடம்பெற்ற நிலையிலேயே தொடர் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந் நிலையில் போராட்டம் இடம்பெற்ற பகுதியை அண்டிப் பொலிஸாரும், புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டிருந்தனர்.
![]()