உலகம்

அமெரிக்கா, இஸ்ரேல் வீரர்கள் ஹோர்மூஸ் சுறாக்களுக்கு இரையாக நேரிடும்; ஈரான் பகிரங்க எச்சரிக்கை!

அமெரிக்கா, இஸ்ரேல் தளபதிகள் இல்லங்களை தாக்குவோம்.. அமெரிக்க வீரர்கள் ஹோர்மூஸ் சுறாக்களுக்கு இரையாக நேரிடும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி முதல் ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் தொடங்கி ஒரு மாதம் முடிந்து விட்டநிலையில் தற்போது வரை முடிந்தபாடில்லை.

இந்த போர் காரணமாக உலக நாடுகள் எரிவாயு மற்றும் எரிபொருள் பெற பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.

ஈரான் அணு ஆயுதம் வைத்துக் கொள்ளக் கூடாது என்பதே அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு காரணமாக இருக்கிறது.

இதனால்தான் போர் நடைபெற்று வருகிறது. ஆனால் அமெரிக்கா, இஸ்ரேலின் கட்டளையை ஏற்க மறுக்கும் ஈரான் தொடர்ந்து அமெரிக்கா ராணுவ தளவாடங்கள் அமைந்திருக்கும் வளைகுடா நாடுகளின் மீது குறி வைத்து ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகிறது.

அதோடு, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல் வழித்தடமான ஹோர்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டது.

இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்கியதில் ஈரானில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளனர். பல ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதை அடுத்து ஈரான் கடும் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

ஒருபக்கம், ஈரானில் விரைவில் போர் முடிவுக்கு வரும் என்றும், பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.

இவ்வாறான நிலையிலேயே உங்கள் வீரர்கள் ஹோர்மூஸ் சுறாக்களுக்கு இரையாக நேரிடும் என அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *