குவைத்,டுபாய் மீது ஈரான் அதிரடித் தாக்குதல்; 500க்கும் மேற்பட்ட அமெரிக்கப் படையினருக்கு என்ன நடந்தது?

தெஹ்ரான்: ஈரான் நேற்று ஞாயிற்றுக்கிழமை குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாய் சிற்றி மீது அதிரடித் தாக்குதல் நடத்தி உள்ளது. அங்குள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளதாக கூறியுள்ள ஈரான் ஜனாதிபதி மசூத் பெசேஷ்கியான், அரபு நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக டுபாயில் உள்ள அமெரிக்காவின் 2 பதுங்கு குழிகள் மீது ஈரான் துல்லியமாக தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நிலையில் கொத்து கொத்தாக அமெரிக்க வீரர்கள் பலியானார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை ஈரான்,குவைத் மற்றும் ஐக்கிய அரபு நாட்டின் டுபாய் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இப்படியான சூழலில் தான் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன், அமெரிக்க-இஸ்ரேல் ஆதரிக்கும் அரபு நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
” உங்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை விரும்பினால், ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா-இஸ்ரேலை உங்கள் நிலத்தைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம். ஏனென்றால் எங்கள் அடிப்படை வசதிகள் அல்லது பொருளாதார மையங்கள் குறிவைக்கப்பட்டால், நாங்கள் கடுமையாகப் பதிலடி கொடுப்போம்” என எச்சரிக்கை செய்துள்ளார்.
ஈரான் மீதான தாக்குதல்களுக்கு அமெரிக்கா அரபு நாடுகளை பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனால் தான் ஈரான் அரபு நாடுகளை குறிவைத்து தாக்கி வருகிறது.
அந்த வகையில் டுபாயில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் பதுங்கு குழிகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஈரானின் புரட்சிகர ராணுவ பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளதாவது: ”டுபாயில் அமெரிக்காவின் 2 ராணுவ பதுங்கு குழிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்ட அமெரிக்கப் படையினர் இருந்த இந்த இடங்கள் மீது துல்லியமான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தி உள்ளோம். மேலும் இந்த தாக்குதலுக்கு பிறகு துபாயில் சம்பவம் நடந்த இடத்துக்கு அம்புலன்ஸ்கள் விரைந்தன. பல மணிநேரமாக மீட்பு பணிகள் நடந்தன. இறந்த மற்றும் காயமடைந்த அமெரிக்கர்களை மீட்கும் பணி நடந்தது.
அமெரிக்க வீரர்கள் இப்பகுதியின் கல்லறை பகுதியாக மாறுவார்கள் என்பதை டிரம்ப்பும், அமெரிக்க இராணுவத் தளபதிகளும் முழுமையாகப் புரிந்துகொண்டிருக்க வேண்டும். வீரமிக்க ஈரான் மக்களுக்கும், இஸ்லாத்தின் துணிச்சலான வீரர்களுக்கும் அடிபணிவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை” என கூறியுள்ளார். இது பதற்றத்தை ஏற்படுத்தியது.
இருப்பினும் ஈரானின் இந்த தகவலை அமெரிக்கா மறுத்துள்ளது. அமெரிக்காவின் மத்திய கட்டளைப்படை (US Central Command), ”டுபாயில் அமெரிக்க படையினர் தாக்கப்படவில்லை. இது போலியான செய்தி . ஈரான் அரசு சமூக வலைதளங்களில் பொய்களை பரப்பி வருகிறது. ஈரானின் ராணுவ வலிமை பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளது. இதனை மறைக்கவே இதுபோன்ற முயற்சிகளில் ஈரான் ஈடுபட்டு வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதனால் ஈரான் – அமெரிக்கா -அரபு நாடுகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
![]()