உலகம்

ஈரானுக்குள் கால் வைத்தால் சவப்பெட்டியில் தான் போவீர்கள்; டிரம்புக்கு கடும் எச்சரிக்கை 

தெஹ்ரான்: ஈரான் மீது தரைவழி தாக்குதலை அமெரிக்க நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் தான் ஈரான் மீது அமெரிக்கா தரைவழி தாக்குதல் நடத்தினால் அமெரிக்க வீரர்கள் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். நரகத்துக்கு வருக எனவும் ஈரான் மண்ணில் காலடி வைக்கும் அமெரிக்க படை வீரர்கள் சவப்பெட்டியில் தான் திரும்பி செல்வார்கள் என்று அந்த நாட்டின் ஆங்கில நாளிதழான “தெஹ்ரான் டைம்ஸ்” முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் போர் புரிந்து வருகிறது. ஒரு மாதத்தை இந்த போர் கடந்து விட்டது. இன்னும் போர் முழுவதுமாக முடியவில்லை. ஈரான் சரணடைய வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார். ஆனால் ஈரான், டிரம்பை மதிக்கவில்லை.

ஈரான் ஒருபோதும் சரணடையாது. முடிந்தவரை தாய்நாட்டை காக்க படை வீரர்கள் போராடுவார்கள். ஈரானை தாக்கியோரை சும்மா விடமாட்டோம் என்று கூறி பதிலடி தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது. இதனால் ஈரான் போர் முடிவுக்கு வருவதில் பிரச்சனை உள்ளது.

இதற்கிடையே தான் அமெரிக்கா தனது படை வலிமையை மத்திய கிழக்கில் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. கூடுதலாக 10,000 வீரர்களை மத்திய கிழக்கிற்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக அமெரிக்காவின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதுமட்டுமின்றி அமெரிக்க வீரர்கள் ஈரானுக்குள் நுழைந்து தரைவழி தாக்குதல் நடத்தி போரை முன்னெடுக்கலாம் எனவும், இதற்கு டொனால்ட் டிரம்ப் இன்னும் அனுமதி வழங்கவில்லை. டிரம்ப் அனுமதி கொடுக்கும் பட்சத்தில் ஈரானுக்குள் அமெரிக்க வீரர்கள் நுழைந்து தாக்குதல் நடத்தலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது

இதுதொடர்பாக அமெரிக்காவின் ‘தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னல்’ பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், ”பெப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்கள் தொடங்கியது. இந்த தாக்குதலை தொடர்ந்து மத்திய கிழக்கில் பல ராணுவ வியூகங்களை மேற்கொள்ளும் நோக்கத்தில் அமெரிக்க கூடுதல் படைகளை மத்திய கிழக்கிற்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே மத்திய கிழக்கிற்கு ஆயிரக்கணக்கான பாராசூட்டில் பறந்து தாக்குதல் நடத்தும் வீரர்களும், கடற்படை வீரர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் கூடுதல் படை வீரர்கள் விரைவில் இணைய உள்ளனர்” என கூறப்பட்டுள்ளது. டிரம்பின் இந்த நடவடிக்கை என்பது ஈரான் மீதான தரைவழி தாக்குதலை சாத்தியமாக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

சவப்பெட்டியில் தான் போவீர்கள்;இந்நிலையில் தான் ஈரானின் ஆங்கில நாளிதழான ‘தெஹ்ரான் டைம்ஸ்’ முதல் பக்கத்தில் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்து செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “நரகத்துக்கு வருக” என்ற தலைப்பில் வெளியாகி உள்ள செய்தியில், ”ஈரான் மண்ணில் காலடி வைக்கும் அமெரிக்க படை வீரர்கள் சவப்பெட்டியில் மட்டுமே திரும்பி செல்வார்கள்” என எச்சரிக்கை செய்துள்ளது.

அதேபோல் ஈரான் ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில்,”ஈரான் மீது தரைவழி தாக்குதல் நடத்தப்பட்டால் ஏமனில் உள்ள ஹவுதி கூட்டாளிகளை நாங்கள் தாக்குதல் நடத்தும்படி கூறுவோம். ஹவுதிகள் செங்கடலில் கப்பல் போக்குவரத்தை முடக்குவார்கள். அந்த வழியாக செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவார்கள். இது போரை இன்னும் வலுப்படுத்தும்” என எச்சரிக்கை செய்துள்ளனர். இதனால் தற்போது ஈரான் – அமெரிக்கா இடையேயான மோதல் அதிகரித்து போர் தீவிரமாகி வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *