சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் வலி, வடக்கில் பெருமளவு காணிகள் விடுவிக்கப்படும்

சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் வலிகாமம் வடக்கில் பெருவாரியான காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கும் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ் மாவட்டத்தில் காணி விடுவிப்பு பிரச்சினை பிரதானமான ஒரு பிரச்சினையாக காணப்படுகிறது.அது தொடர்பாக எமது அரசாங்கத்தாலும் கூட நாம் வாக்குறுதி அளித்தோம்.
தையிட்டி விகாரை பிரச்சினையை எடுத்துக் கொண்டாலும் அது தீர்க்கப்பட வேண்டும். அதனை அண்டியிருக்கின்ற அனைத்து காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதிலே மாற்றுக் கருத்து இல்லை. இருந்தபோதிலும் அதில் நூற்றுக்கு 80 வீதமான செயற்பாடுகளை பூர்த்தி செய்துள்ளோம். அந்தக் காணி உரிமையாளர்களை இனம் கண்டு கொண்டிருக்கிறோம். அந்த காணிகளை இனம் கண்டு அளவிட்டு மீள கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
இது தொடர்பில் பௌத்த சாசன அமைச்சர் சுனில் செனவி தலைமையிலான குழுவில் நானும் இருக்கிறேன். அந்தக் குழுவில்
நீதி அமைச்சர் ,யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ,தெல்லிப்பழை பிரதேச செயலாளர் அது சார்ந்த அனைத்து அதிகாரிகளும் , விகாராதிபதியும் அதில் இருக்கிறார்கள்.
அனைவருடனும் இணைந்து சுமுகமான முடிவை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். மிகச் சீக்கிரமாக அதனை செய்வோம்.
அதேபோன்று விஷேடமாக எதிர்வரும் காலங்களில் பலாலி கிழக்கு பக்க பிரதேசம் முழுவதையும் முழுமையாக விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒரு சில பிரச்சனை இருக்கிறது. அந்தப் பிரச்சினை தீர்ந்து எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் பெருவாரியான காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்போம்.
அந்த வகையில் வலி வடக்கு பகுதியில் கட்டப்பட்டு வருகின்ற இராணுவ வைத்தியசாலை தொடர்பாக நடவடிக்கைகளை எடுப்பதற்கும் அது சம்பந்தமாக பேசுவதற்கும் ஜனாதிபதியினுடைய கவனத்திற்கும் பாதுகாப்புச் செயலாளரின் கவனத்திற்கும் கொண்டு செல்லவும்,அதை நிறுத்துவதா? அல்லது அதைக் கட்டி மக்களிடம் எதிர்காலத்தில் கையளிப்பதா என்பது தொடர்பாக பேச வேண்டும். குறித்த நில உரிமையாளர்களுடனும் பேச வேண்டும் என்றார்.
![]()