விவசாயிகளின் உரப் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் அமைச்சர்கள் , எம்.பிக்களின் வீடுகளைச் சுற்றி வளைப்போம்

விவசாயிகள் எதிர்நோக்கும் உரப் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வு காணாவிட்டால் விவசாயிகள் பொறுமை இழப்பார்களாக இருந்தால் அவர்கள் வீதிக்கு இறங்கும் நிலைமை மாத்திரமன்றி கொழும்பிலுள்ள அமைச்சுக்களையும், அமைச்சர்களின் வீடுகளையும், ஊர்களில் உள்ள தேசிய மக்கள் சக்தி எம்.பிக்களின் வீடுகளையும் சுற்றி வளைத்து அவர்களை விரட்டியடிக்கும் நிலைமையும் என்று தேசிய விவசாயிகள் ஒன்றியம் எச்சரித்துள்ளது.
தேசிய விவசாயிகள் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்த சங்கத்தின் தலைவர் அநுராத தென்னக்கோனே இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது நாட்டில் விவசாயிகள் உரப் பிரச்சினையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். உரம் இல்லாமல் விவசாயிகளால் விவசாயம் செய்ய முடியாது. இதனால் உரத்தை கொண்டு வருவதற்கு அரசாங்கம் முறையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இப்போது நாட்டில் கையிருப்பில் இருக்கும் உரத்தின் அளவை கூற வேண்டும். யூரியா உரம் எங்கே இருக்கின்றது என்று கூற வேண்டும். உரத்தை விநியோகிப்பதாக அமைச்சின் செயலாளர் கூறுகின்றார். ஆனால் நாட்டில் உரம் இல்லாமல் எப்படி அதனை விநியோகிப்பது. 68,000 மெற்றிக் தொன் உரம் இருப்பதாக ஜனாதிபதி கூறுகின்றார். ஆனால் இங்கே தனியார் உர நிறுவனங்களும், தனியார் விவசாய நிறுவனங்களும் உள்ளன. அவை அவற்றை வைத்துக்கொண்டு எஞ்சியவற்றையே விநியோகிக்கும். இங்கே அமைச்சர்கள், அதிகாரிகள் கூறுவதை நாங்கள் நம்புபவதில்லை. உரத்தை கொண்டு வர முடியாத நிலைமையே காணப்படுகின்றது. இப்போதும் உரம் இல்லாமல் விவசாயிகள் எப்படி விவசாயம் செய்வது.
இப்போது, அமைச்சர் நாமல் கருணாரட்ன ஜோக்கர் போன்று இருக்கின்றார். உலக சந்தையில் இருந்து புதிய உரத்தை கொண்டு வர வேண்டும். உர மானியங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எவ்வாறாயினும் பொறுமை இழந்து விவசாயிகள் வீதிக்கு இறங்கும் நிலைமை ஏற்பட்டால் அவர்கள் கொழும்பை சுற்றி வளைப்பதுடன், கொழும்பிலுள்ள அமைச்சுக்கள் மட்டுன்றி தேசிய மக்கள் சக்தியின் ஊர்களில் உள்ள எம்.பிக்களின் வீடுகளையும் சுற்றி வளைப்போம். அதேபோன்று அமைச்சர்களின் வீடுகளையும் சுற்றி வளைப்போம். இதனால் விவசாயிகளை தவறாக வழிநடத்த முயற்சிக்க வேண்டாம். இம்முறை சிறுபோகத்தில் விவசாயிகளுக்கு ஏதாவது நடந்தால் உங்களின் வீடுகளை சுற்றிவளைத்து உங்களை வீட்டுக் காவலில் வைப்பது மட்டுமன்றி ஊர்களில் உள்ள விவசாயிகள் உங்களை எல்பீசியா தடிகளால் விரட்ட வேண்டிய இடத்திற்கு விரட்டும் நிலைமை ஏற்படும் என்றார்.
![]()