உலகம்

மசகு எண்ணெய் விலை 150 டொலராகுமா?; உலகப் பொருளாதாரம் ஆட்டம் காணும் நிலை

சர்வதேச சந்தையில் பிரெண்ட் மசகு எண்ணெய் விலை 150 டொலரை தொடுமானால் அது உலகப் பொருளாதாரத்தில் கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று பிளாக்ராக் தலைமைச் செயல் அதிகாரி லாரி ஃபிங்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த வாரம் மசகு எண்ணெய் பரல் ஒன்றுக்கு 110 டொலரை தாண்டியபோது, உலக நாடுகளின் பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தன. ஒரே வர்த்தகதினத்தில் முதலீட்டாளர்களுக்கு பல லட்சம் கோடி ரூபா இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்கா – ஈரான் இடையிலான பதற்றம் ஏப்ரல் மாதம் வரை நீடித்தால், மசகு எண்ணெய் விலை பரல் ஒன்றுக்கு 150 டொலரைத் தாண்டும் என்று ‘கெப்ளர்’ ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.

இந்த நிலையில், பிளாக்ராக் முதலீட்டு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரிலாரி ஃபிங்க் கூறியுள்ளதாவது:

ஈரான் விவகாரத்தில் அச்சுறுத்தல் நீடித்து, எண்ணெய் விலை உச்சத்தில் இருந்தால் அது உலகப் பொருளாதாரத்தில் ஆழமான மற்றும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். மேலும், இது ஒரு கடுமையான பொருளாதாரப் பின்னடைவுக்கு வழிவகுக்கும். உலகப் பொருளாதாரத்தின் அச்சாணியாக எரிசக்தி திகழ்கிறது.

போக்குவரத்து, தொழிற்சாலை உற்பத்தி மட்டுமின்றி உணவுப் பொருட்களின் விலையையும் கச்சா எண்ணெய் விலையே மறைமுகமாகத் தீர்மானிக்கிறது. எண்ணெய் விலை 150 டொலரை எட்டும்போது, அது ஒரு மிதமான மாற்றமாக இருக்காது; மாறாக அது உலகப் பொருளாதாரத்திற்குப் பெரும் அதிர்ச்சியாக அமையும். பணவீக்க பாதிப்பு எண்ணெய் விலை உயர்வால் எரிபொருட்கள் விலை உடனடியாக அதிகரிக்கும்.

இதன் தொடர்ச்சியாக:

* போக்குவரத்துச் செலவு அதிகரிப்பதால் காய்கறிகளின் விலை உயரும்.

* வாடகைக் கார் கட்டணங்கள் மற்றும் டெலிவரி கட்டணங்கள் அதிகரிக்கும்.

* சில பகுதிகளில் மின்சாரக் கட்டணமும் உயரும் அபாயமும் உள்ளது.

இந்தியா போன்ற மசகு எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு, இது ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தின் மீதான ‘கூடுதல் வரி’ சுமையாக மாறும். குறிப்பாக, குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தினர் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படுவர்.

வட்டி குறைய வாய்ப்பில்லை பணவீக்கம் உயரும்போது ரிசேர்வ் வங்கி உள்ளிட்ட மத்திய வங்கிகளால் வட்டி விகிதங்களைக் குறைக்க முடியாது.

* வட்டி விகிதக் குறைப்பு தள்ளிப்போகும்.

* கடன் வாங்குவது செலவுமிக்கதாக மாறும்.

* வீட்டுக் கடன் மற்றும் இதர கடன் தவணைகள் உச்சத்தில் நீடிக்கும். இதனால் மக்கள் செலவு செய்வதைக் குறைப்பார்கள். இதனால் நிறுவனங்களின் முதலீடுகளும் முடங்கி வேலைவாய்ப்பும் பொருளாதாரமும் சுணக்கமடையும்.

* வரலாற்று ரீதியாக, மசகு எண்ணெய் விலை உச்சத்தைத் தொட்டபோதெல்லாம் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. பரல் விலை 150 டொலர் என்ற நிலையில் விமான நிறுவனங்கள் தங்கள் சேவைகளைக் குறைக்கும் அல்லது கட்டணத்தை உயர்த்தும்.

* எரிபொருள் விலை உயர்வால் வாகனங்களுக்கான தேவை குறையும்.

*சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் லாப வரம்பு சரியும் என்றும் தலைமைச் செயல் அதிகாரி லாரி ஃபிங்க் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *