இலங்கை

மக்களின் காணிகளை விட்டு வனஜீவராசிகள் திணைக்களம் வெளியேற வேண்டும்-அருட்தந்தை வசந்தன்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் பெருமளவான மக்களின் நிலப்பரப்பை கையகப்படுத்திவைத்துள்ள வனஜீவராசிகள் திணைக்களம் மக்களின் காணிகளை மக்களிடமே கையளித்துவிட்டு உடன் வெளியேற வேண்டுமென கட்டைக்காடு பங்குத்தந்தை வசந்தன் அடிகளார் தெரிவித்துள்ளார்

அண்மையில் கட்டைக்காடு-கேவில் பகுதியில் யானைகள் ஏற்படுத்திய சேதத்தை  பார்வையிட்ட பின்பே மேற்கண்டவாறு தெரிவித்தார்

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

கடந்த 20ம் திகதி குமார் என்பவரின் கரைவலைவாடிக்கு வருகை தந்த ஐந்திற்கும் மேற்பட்ட யானைகள் 36 தென்னைகளை நாசமாக்கியதாக கேள்விப்பட்டு நிலைமைகளை பார்வையிட இங்கே வருகை தந்தேன்.

நான் அறிந்தவரை குறித்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இதுவரையான காலப்பகுதியில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறவே இல்லை.முதல் தடவையாக காட்டுயானைகள் வந்து பெருமளவான தென்னைகளை நாசம் செய்துள்ளன

இந்த இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகவேதான் அதனை பார்வையிட பங்குத்தந்தை என்னும் ரீதியில் இங்கே வருகைதந்துள்ளேன்

இதெல்லாம் எங்கள் மக்கள் காலாகாலம் வாழ்ந்த அவர்களுடைய பூர்விக காணிகள் மக்கள் தற்போதும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற காணிகளை எல்லாம் தேசிய பூங்கா என்று கூறி கடந்த கால அரசாங்கங்களும் தற்போதைய அரசாங்கமும் அடையாளப்படுத்தி, ஆக்கிரமிப்பு செய்கின்ற ஒரு கைங்கரியத்தை தான் இங்கே செய்து கொண்டிருக்கிறார்கள்

இதைத்தான் நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறுகிறோம் 2009ஆம் ஆண்டுக்கு பிற்பாடு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை வடக்கு கிழக்கிலே நடந்து கொண்டிருக்கின்றன அரச திணைக்களங்கள் ஊடாக இந்த கைங்கரியங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன

இந்த பிரதேசத்திற்கும்,வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை,இங்கே காட்டு விலங்குகள் இல்லை, அடர்ந்த காடுகள் இல்லை, இந்த பகுதி வனஜீவராசிகள் திணைக்களத்தினுடைய பகுதி என்று கூறிக் கொள்வதற்கான எந்த சான்றுகளும் இல்லை

எனவேதான் கிராம மக்களுக்கு எழுகின்ற சந்தேகம் எனக்கும் இருக்கின்றது இந்த பகுதிக்குள் யானைகளை திட்டமிட்டு கொண்டு வந்து விட்டு இந்த பகுதியில் யானைகள் வசிக்கின்ற இடம் இது தேசிய பூங்கா என்பதனை ஊர்ஜிதம் செய்வதற்காக இந்த காரியங்களை இவர்கள் செய்திருக்க கூடும்

இது ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை வரலாற்றில் இவர்கள் இவ்வாறு பல விடயங்களை செய்திருக்கிறார்கள் எங்களுடைய காணிகள் இவ்வாறு தான் அபகரிக்கப்பட்டு வருகிறது

இந்த யானைகள் இங்கே இதுவரைக்கும் வாழவே இல்லை யானைகள் வாழ்வதற்கான ஏதுவான காரணங்கள் இந்த காட்டுப்பகுதியில் இல்லை அவர்களுக்கான உணவு இல்லை,அடர்ந்த காடுகள் இல்லை

அவ்வாறு பெருங்காட்டில் இருந்து வருவதாக இருந்தாலும் கிட்டத்தட்ட 36 கிலோ மீட்டர்களை தாண்டி வருகை தர வேண்டும் ஆனால் தற்போது யானைகள் வரக்கூடிய இடம் பாரிய தண்ணி நிறைந்த இடமாக காணப்படுகிறது இவ்வாறு இருக்கும் போது இந்த யானைகள் எவ்வாறு இங்கே வருகை தந்தது?

சம்பந்தமே இல்லாமல் மக்களுடைய பூர்வீக காணிகளை கையகப்படுத்தி வைத்திருக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம் மக்களுடைய காணிகள்களை உடனடியாக கையளிக்க வேண்டும்.

குறித்த வர்த்தமானி முற்று முழுதாக அகற்றப்பட வேண்டும்

எங்களுடைய மக்கள் அவர்களுடைய சொந்த இடங்களில் நிம்மதியாக தங்களுடைய தொழில்களை செய்து வாழ அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும்

யானை சேதப்படுத்திய இடத்திலிருந்து 50 மீட்டருக்குள் தான் ராணுவ முகாம் இருக்கிறது அவர்களை கேட்டபோது யானை வந்தது தங்களுக்கு தெரியாது என்கிறார்கள்.

அவர்களுடைய பதிலையும் மக்களுடைய சந்தேகத்தையும் வைத்து பார்க்கும் போது இவர்கள் திட்டமிட்டு தான் இந்த யானைகளை கொண்டு வந்து இறக்கி விட்டதாகவே நம்பப்படுகிறது

ஆகவே மக்களுடைய காணிகளை அபகரித்து இனவழிப்பு செய்யாமல் உடனடியாக வனவளத்திணைக்களத்தினர் குறித்த பகுதியில் இருந்து வெளியேற வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *