உலகம்

நேட்டோ நாடுகளை ‘கோழைகள்’ என விமர்சித்த அமெரிக்க ஜனாதிபதி; நிலைமையைச் சமாளிக்க அடுத்த வாரம் ‘கோப்ரா’ கூட்டம்

பிரித்தானியாவிற்குச் சொந்தமான டியாகோ கார்சியா (Diego Garcia) கூட்டுப்படைத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதால் சர்வதேச அளவில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் மீதான மேலதிக தாக்குதல்களுக்குப் பிரித்தானியத் தளங்களைப் பயன்படுத்திக்கொள்ள அமெரிக்காவிற்குப் பிரதமர் கீர் ஸ்டார்மர் அனுமதி வழங்கிய சில மணிநேரங்களிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஈரானால் ஏவப்பட்ட இரண்டு நடுத்தர தூர ஏவுகணைகளும் இலக்கை எட்டவில்லை என்றும், ஒன்று அமெரிக்க போர்க்கப்பலால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, ‘பிரித்தானிய மக்களின் விருப்பத்திற்கு மாறாகச் செயல்படும் பிரதமர் ஸ்டார்மர், பிரித்தானியர்களின் உயிரை ஆபத்தில் தள்ளுகிறார்’ என எச்சரித்துள்ளார். தற்காப்பு உரிமையின் அடிப்படையில் ஈரான் பதிலடி கொடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சூழலில், பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவி கெமி பேடனொக், பிரதமரின் இந்த திடீர் மாற்றத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். லிபரல் டெமாக்ரட்ஸ் மற்றும் கிரீன் கட்சிகள், இராணுவத் தளங்களைப் பயன்படுத்த அனுமதி அளிப்பதற்கு முன்னர் நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பிரித்தானியா இன்னும் வேகமாகச் செயல்பட்டிருக்க வேண்டும் எனக் கூறியதுடன், மற்ற நேட்டோ நாடுகளையும் கடுமையாகச் சாடியுள்ளார். போர் காரணமாக உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவினங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்க, அடுத்த வாரம் ‘கோப்ரா’ (Cobra) அவசரக் கூட்டத்தைக் கூட்டப் பிரதமர் ஸ்டார்மர் தீர்மானித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *