இலங்கை

காணாமல்போனோர் தரவுகளால் கொதித்தெழுந்த சாணக்கியன்! சர்வதேச விசாரணைக்கு இடமில்லை! நீதி அமைச்சர் திட்டவட்டம்

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் எவ்விதமான சர்வதேச விசாரணைகளையும் முன்னெடுப்பதை அரசு கடுமையாக எதிர்ப்பதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

காணாமல் போனவர்களின் எண்ணிக்கை குறித்து அமைச்சர் உரையாற்றுகையில், “2009ஆம் ஆண்டு போரின் இறுதிக்கட்ட காலப்பகுதியில் சுமார் 2 ஆயிரத்து 764 பேர் காணாமல்போயுள்ளனர் என்று தரவுகள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த எண்ணிக்கை விவாதத்துக்குரியது. காணாமல் போனவர்கள் தொடர்பான துல்லியமான தரவுகள் தற்போது எமது வசம் இல்லை.” – என்றார்.

போர்க் காலப்பகுதியில் இரு தரப்பினருமே இத்தகைய காணாமலாக்கல் சம்பவங்களில் ஈடுபட்டனர் என்று குறிப்பிட்ட அமைச்சர், அரசு ஒருபோதும் இத்தகைய செயல்களை ஆதரிக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து எந்தவொரு சர்வதேச அமைப்போ அல்லது வெளித்தரப்போ விசாரணை நடத்துவதை அரசு அனுமதிக்காது என்று தெரிவித்த நீதி அமைச்சர், உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

நீதி அமைச்சரின் இந்த விளக்கத்தை ஏற்க முடியாது என்று தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், அரசின் நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டித்தார்.

“காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் நீதி வழங்குவதிலும், பொறுப்புக்கூறலிலும் அரசிடம் முறையான அல்லது தெளிவான கொள்கை எதுவும் இல்லை. அமைச்சரின் தரவுகள் முரணாக உள்ளன.” – என்று சாணக்கியன் எம்.பி. குற்றஞ்சாட்டினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *