இலங்கை

அடியாட்டகளுடன் வந்தாரா பணிப்பாளர் சத்தியமூர்த்தி?; பெண் பரபரப்புக் குற்றச்சாட்டு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி, வைத்தியசாலையில் வேலை செய்யும் பணியாளர்களை அடியாட்களாக கொண்டுவந்து அராஜகம் செய்வதாக பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கருத்து தெரிவிக்கையில்,

கனடா வதிவுரிமையுடைய ஒருவருடன் எனக்கு நிச்சயதார்த்தம் இடம்பெற்றது. அப்போது அவருக்கு கனடா குடியுரிமை மட்டுமே இருந்தது. நிச்சயதார்த்தத்தின் பின்னர் நான், மானிப்பாய் சந்தியில் இருந்து உடுவில் செல்கின்ற வீதியில் காணி ஒன்றினை எனது சொந்த பணத்தில் கொள்வனவு செய்ய முயன்றேன்.

இந்நிலையில் என்னை திருமணம் செய்யவிருந்த நபர் குறித்த காணியை தனது பெயரில் எழுதி கொடுக்குமாறும், அப்படி கொடுத்தால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மூலம் அதில் தொழிற்சாலை அமைக்க முடியும் என்றும் கூறினார்.

குறித்த வார்த்தைகளை நம்பிய நானும் அவ்வாறே செய்தேன். இதன்போது அவருக்கு கனடா வதிவுரிமை மாத்திரம் இருந்ததால் நானே நேரடியாக காணிக்கான கொடுப்பனவை கொடுத்தேன். அதற்கான ஆதாரங்கள் உள்ளன. நான், என்னை திருமணம் செய்யவிருந்தவரது பெயரில் வாங்கிய காணிக்கு பின்பக்கம் இன்னொரு காணியை எனது பெயரில் வாங்கினேன்.

பின்னர் என்னை திருமணம் செய்யவிருந்த நபர் என்னை விலகி சென்றுள்ளார். எனது தந்தை முச்சக்கர வண்டி சாரதி. இந்நிலையில் இனந்தெரியாத நபர்கள் தந்தையின் முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்துவது போன்ற பாசாங்கில் அவரை அழைத்து சென்று, மற்றைய காணியையும் எழுதி தருமாறு பலமுறை மிரட்டினர். அந்த யோசனையால் எனது தந்தையும் இறந்துவிட்டார்.

பின்னர் குறித்த காணியை மீட்பதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டேன். நான் ஒரு தொண்டு நிறுவனத்தை நடாத்தி வருகின்ற நிலையில் அந்த நிறுவனத்தின் பெயர்ப்பலகையை காணியில் நாட்டியவேளை சிலர் வந்து அதனை பிடுங்கி வீசினர். காணியில் பயன்தரு மரஞ்செடிகளை நாட்டினால் இரவோடு இரவாக அவை வெட்டி வீசப்பட்டிருக்கும்.

குறித்த காணியானது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்திக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட விடயம் அதன்பின்னர்தான் எனக்கு தெரியும். அவர் குறித்த காணி தனக்கு எழுதப்பட்டதாகவும், அந்த ஆவணத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு என்னை பார்க்குமாறும், பின்னால் இருக்கின்ற மற்றைய காணி உறுதியையும் தன்னிடம் கொண்டுவந்து தருமாறும் கூறினார்.

ஒருதடவை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் பணியாளர்களை அடியாட்களாக அழைத்துவந்து மிரட்டினார். அதன்பின்னர் அதிலே வந்த பணியாளர் ஒருவர் தான் தெரியாமல் வந்ததாக கூறி என்னிடம் மன்னிப்பும் கோரினார்.

குறித்த காணிப் பிரச்சினை தொடர்பாக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தங்கமுத்து சத்தியமூர்த்தியின் தம்பியும் சிலரும் வந்து பின் பக்கம் இருக்கின்ற எனது காணிக்கும் முன் பக்கம் இருக்கின்ற பிரச்சினையில் உள்ள காணிக்கும் இடையே எல்லை போடுவதற்கு முயற்சித்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து மானிப்பாய் பிரதேச சபைக்கு தெரியப்படுத்தியபோது அங்குவந்த மானிப்பாய் பிரதேச சபையின் உத்தியோகத்தர், அனுமதியின்றி சீமெந்து வேலைகள் செய்ய முடியாது என்றும், சட்டதிட்டங்களை கூறியவேளை அங்கிருந்த பணியாளர்கள் அவரை மிரட்டினர்.

இதுகுறித்து நான் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியும் எனது முறைப்பாட்டை பதிவு செய்வதற்கு பொலிஸார் மறுத்தனர். அதன்பின்னர் முறைப்பாட்டை பதிவு செய்தனர். பின்னர் விசாரணைகளின் போது இருதரப்பினரையும் காணிக்குள் செல்ல வேண்டாம் என கூறினர்.

பின்னர் குறித்த காணியை சுத்தம் செய்யும் போர்வையில் சிலரை கொண்டுவந்து விட்டனர். அவர்களுக்கு நான் காணியின் பிரச்சினை குறித்து கூறியவேளை வேலைக்கு வந்தவர்கள் அநாகரீகமான வார்த்தையில் என்னை திட்டினர்.

இதற்கு முன்னர் ஒருதடவை சாவகச்சேரி பொலிஸாரையும் வைத்து மிரட்டினர். காணியானது மானிப்பாய் பொலிஸ் பகுதிக்குள் காணப்படுகின்ற நிலையில் எதற்காக காணி குறித்தான முறைப்பாட்டினை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும்? இதன்போது, மோசமான வழக்குகளில் என்னை தள்ளப்போவதாக சாவகச்சேரி பொலிஸார் மிரட்டினர்.

தற்போது குறித்த பிரச்சினையை யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஊடாக தீர்க்கப்போவதாக தங்கமுத்து சத்தியமூர்த்தியின் தம்பி கூறுகின்றார்.

தமது பதவியையும், அரசியல் செல்வாக்கினையும் வைத்துகொண்டு இவ்வாறு செய்கின்றனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக இருந்துகொண்டு இவ்வாறு கேவலமான வேலைகளை செய்கின்றார்.

எனவே எனது பிரச்சனைக்கு தீர்வு வேண்டும். அடியாட்கள் மற்றும் பொலிஸாரை வைத்து இவ்வாறான அச்சுறுத்தல்களை செய்ய வேண்டாம். எனது சொத்து மீளவும் எனக்கு கிடைக்க வேண்டும்.

என்னை திருமணம் செய்வதாக வந்தவர் தொடர்பாக நான் கனேடிய தூதரகத்துக்கு தெரிவித்த நிலையில் அவர் தொடர்பாக கனேடிய அரசு விசாரணைகளை செய்தது. இதன்போது தான் அவர் பல மோசமான செயல்கள், போதைப்பொருள் வியாபாரம் போன்றவற்றில் ஈடுபடுவதாக கனேடிய அரசாங்கத்துக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவருக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க கனேடிய அரசாங்கமும் முயற்சித்து வருகிறது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *