” உயிர்த்த ஞாயிறு” எப்போது வரும் என்று நாட்காட்டியை காட்டியது இவர்தான் தான் என்று கூட இவர்கள் கூறக்கூடும்

ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர்களுடன் தொடர்பு கொண்டு,குண்டுகளைத் தயாரித்து தாக்குதலுக்குத் தயாரான சஹ்ரான் குழுவிற்கு, தாக்குதல் நடத்த வேண்டிய தேவாலயத்தை சுரேஷ் சலே தான் காண்பித்தார் என்று இலங்கையில் சிலர் கூறுவது நகைச்சுவையான விடயம்.இன்னும் சில நாட்களில் ” உயிர்த்த ஞாயிறு எப்போது வரும் என்று தெரியாமல் நாட்காட்டியை காட்டியது இன்னார் தான்” என்று கூட இவர்கள் கூறக்கூடும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப்பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனஅலுவலகத்தில் நேற்று வியாழக்கிமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் அமெரிக்க பிரஜைகளும் கொல்லப்பட்டார்கள்.ஆகவே இந்த தாக்குதல்கள் குறித்து அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.குண்டுத்தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட அமெரிக்காவின் எப்.பி.ஐ. நிறுவனம் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி பயங்கரவாதி சஹ்ரான் என்று தெளிவாக அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதேபோல் பயங்கரவாதி சஹ்ரான் உள்ளிட்ட தரப்பினர் இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்பதற்கான ஆதாரங்களையும் வெளிப்படுத்தியது.
குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் என்று தெளிவாக அமெரிக்கா அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலையில் தற்போது பிரதான சூத்திரதாரியை தேடுவதற்கான விசாரணைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.இதன் பின்னணியில் தான் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டுக்காக சேவையாற்றிய சுரேஷ் சலே தற்போது அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.நாட்டுக்காக இவர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் எமக்கு கிடையாது.ஆனால் உண்மையை வெளிக்கொண்டு வருவதாக குறிப்பிட்டுக் கொண்டு அப்பாவிகளை இலக்குவைப்பதை அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும்
![]()