இலங்கையில் எண்ணெய்க் கிணறுகள் இருந்தனவா?; நாமல் கிண்டல்

இலங்கையில் எண்ணெய்க் கிணறுகள் இருக்கின்றன என்றே ஜனாதிபதி முன்னர் நினைத்துள்ளார் . இப்போது அது இல்லையென்று தெரிந்ததால் எரிபொருட்களின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளார் . ஶ்ரீலங்கா பொதுஜன பெரமன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்று புதன்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
உலகச் சந்தையென்ற ஒன்று இருக்கின்றது என்று ஜே.வி.பியினர் மற்றும் கடந்த காலங்களில் போராட்டம் நடத்தியவர்களுக்கு இப்போது தெரிந்திருக்கும் என்று நினைக்கின்றோம். நாட்டில் எண்ணெய்க் கிணறுகள் இருக்கின்றன என்றே ஜனாதிபதி முன்னர் நினைத்துள்ளார் . இப்போது அது இல்லையென்று தெரிந்ததால் எரிபொருள் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நினைக்கின்றோம்.
உலகச் சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள காரணத்தினாலேயே இங்கு விலைகளை அதிரித்ததாக கூறினர். ஆனால் இப்போது உலகச் சந்தையில் விலை குறைந்துள்ள போதும் இங்கு குறைக்கப்படவில்லை. இன்னுமொரு பக்கத்தில் நிலக்கரி மோசடியில் பெருமளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை மக்கள் மீது சுமத்துவதற்காகவே எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது. இதனை தவிர இது உலகச் சந்தையை அடிப்படையாகக் கொண்டது அல்ல.
இதேவேளை தற்போதைய உலகம் பெரும் நெருக்கடி நிலைக்குள் தள்ளப்படுகின்றது. இதற்கு முகம்கொடுக்கும் வகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்காமல் கடந்த 78 வருட கால ஆட்சியாளர்களை குற்றம் சுமத்திக்கொண்டே இந்த அரசு பயணிக்கின்றது. இதனை விடுத்து நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்கக்கூடிய வகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றார்.
![]()