இந்தியா

அ.தி.மு.க. கூட்டணியில் த.வெ.க. இணையுமா?; விஜய்க்கு வந்த ஆலோசனை

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவும் சூழ்நிலை உள்ளது. தேர்தலுக்கு புது வரவான நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தால் தேர்தல் களம் ஆரம்பம் முதலே அனல் பறந்து வருகிறது.

ஆளுங்கட்சியான தி.மு.க. 26 கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு வலுவாக தேர்தலை சந்திக்கிறது. எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வில் பா.ஜ.க., பா.ம.க., அ.ம.மு.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகள் இருந்தாலும் தி.மு.க.வை எதிர்க்க இந்த படை போதாது என்றே அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந்த நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை இணைப்பதற்கான முயற்சிகள் ஒரு பக்கம் நடந்து வருகின்றன.

இதற்கான, ஆலோசனையை ஆந்திர மாநில துணை முதல்-மந்திரியும், நடிகருமான பவன் கல்யாண், நடிகர் விஜய்யுடன் மேற்கொண்டார் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, ஆடை விஷயத்தில் ஆந்திர மாநில முன்னாள் முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை பின்பற்றி, காக்கி பேண்ட், வெள்ளை நிற சட்டையை விஜய் அணிந்து வருகிறார்.

சமீபத்தில், சென்னையில் நடைபெற்ற சகோதரர் வீட்டு இல்லத் திருமண விழாவில் பங்கேற்க வந்த ஜெகன்மோகன் ரெட்டியை விஜய் சந்தித்து அரசியல் ஆலோசனைகளை கேட்டுப் பெற்றதாக பரபரப்பாக பேசப்பட்டது.

அப்போது, “ஒரு மாநிலத்தில் அரசியல் கட்சி நடத்தும் நீங்கள், ஏன் தேவையில்லாமல் மத்திய அரசை எதிர்த்து பேசி பகைத்துக்கொள்ள வேண்டும். தற்போதைய சி.பி.ஐ. விசாரணைக்கு அதுகூட ஒரு காரணமாக இருக்கலாம். எனவே, நீங்கள் மாநில கட்சிகளை மட்டும் விமர்சனம் செய்யுங்கள்” என்று ஆலோசனை வழங்கியதாக தெரிகிறது.

அதன்பிறகுதான் தனது பிரசார கூட்டங்களில், மத்திய அரசை விமர்சிப்பதை நடிகர் விஜய் நிறுத்திக்கொண்டார். தற்போது, கூட்டணி குறித்து பவன் கல்யாண் வழங்கிய ஆலோசனையையும் நடிகர் விஜய் ஏற்றுக்கொள்வார் என்றே தெரிகிறது.

நடிகர் விஜய்யிடம் பவன் கல்யாண், “திருப்பதியில் நடந்த பெரும் மாநாட்டில் ஏராளமான மக்கள் வந்திருந்தபோதும், எனது அண்ணன் சிரஞ்சீவியால் அங்கு வெற்றி பெற முடியவில்லை.

நானும் கூட வெற்றி பெற முடியவில்லை. அதன் அடிப்படையில் ஒரு சாணக்கியத்தனமான அரசியல் முடிவை எடுக்காமல் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன், குறிப்பாக தெலுங்கு தேசம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்தேன்.

அதன் மூலம் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களையும், 23 சட்டமன்ற உறுப்பினர்களையும் பெற்று ஜனசேவா அரசியலைத் தக்க வைத்துக்கொண்டேன். எனவே, அதேபோல் நீங்களும் சாணக்கியத்தனமாக செயல்பட்டு, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து உங்களுக்கான அரசியல் இடத்தை உறுதி செய்துகொள்ளுங்கள்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது.

அ.தி.மு.க. கூட்டணிக்கு தமிழக வெற்றிக் கழகம் வந்தால், 50 இடங்களுக்கு குறையாமல் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் கட்சியின் தலைவர் விஜய்யுக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இனி இறுதி முடிவை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்தான் எடுக்க வேண்டும். தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை தொடங்காமல், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் காத்திருப்பது இதற்குத்தானாம்.

தற்போது, விஜய்யுடன் பேச்சு வார்த்தை நடத்தி வரும் பா.ஜ.க.வின் முயற்சி வெற்றி பெற்றால், வரும் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு கடும் சவால் அளிப்பதுடன் தேர்தலில் வெற்றி பெறவும் பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *